ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று முதல் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளப் பெருக்கு காரணமாக துபையின் பெரும்பாலான நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஓமனில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துபாய், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத கனமழை காரணமாக அந்த நாடுகளின் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். துபாயில் இடி மின்னலுடன் கனமழையும், சூறாவளி காற்றும் வீசி வருகிறது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி, ஷார்ஜாவிலும் கனமழை கொட்டி வருகிறது. அந்நகரங்களில் பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. சுரங்கப்பாதைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், அவை மூடப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கால் பிரபலமான குவைத் மார்க்கெட் பகுதியும் மூடப்பட்டுள்ளது.
நேற்று பெய்யத் தொடங்கிய மழை காரணமாக வீதிகளில் குளங்களைப் போல தண்ணீர் தேங்கி நின்றன. பலத்த காற்று காரணமாக உலகின் மிக சுறுசுறுப்பான விமான நிலையமான துபாய் பன்னாட்டு விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.
புயல் மழையைக் கருத்தில்கொண்டு, ஐக்கிய அரபு நாடுகளின் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. அரசு ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்தவாறு பணிகளை மேற்கொண்டனர். கனமழை காரணமாக, அனைவரும் வீட்டில் இருந்தபடி பணியாற்றும்படியும் வீடுகளிலேயே மக்கள் பத்திரமாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
ஓமனில் கடந்த சில நாள்களாகப் பெய்யும் மழையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பள்ளிக் குழந்தைகளும் அடங்குவார்கள். மேலும் பலரை காணவில்லை எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!
தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!
மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!