கழுத்தை நெரித்து கணவனைக் கொலை செய்த மனைவி: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

கொலை செய்யப்பட்ட  ரமேஷ் - கைதான கிருஷ்ணவேணி
கொலை செய்யப்பட்ட ரமேஷ் - கைதான கிருஷ்ணவேணி

தேனியில் சொத்துக்காக கணவனை கொலை செய்துவிட்ட தற்கொலை நாடகமாடிய மனைவியை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரமேஷ், கிருஷ்ணவேணி
ரமேஷ், கிருஷ்ணவேணி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(47). இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் கேரள மாநிலம்  உடும்பன் சோலையில் வசித்து வந்துள்ளனர். இவர்களுடைய மகன் கார்த்திக் போடியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார்.

தீபாவளி பண்டிகைக்காக ரமேஷ் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி இருவரும் போடிக்கு  வந்துள்ளனர். தீபாவளி முடிந்ததும் மகன் கார்த்திக் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதனிடையே ரமேஷ் நேற்று முன்தினம் அதிகாலை தற்கொலை செய்து கொண்டதாக, போடி நகர காவல் நிலையத்திற்கு அவரது மனைவி கிருஷ்ணவேணி தகவல் தெரிவித்துள்ளார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போலீஸார் உயிரிழந்து கிடந்த  ரமேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது செய்யப்பட்ட கிருஷ்ண வேணி
கைது செய்யப்பட்ட கிருஷ்ண வேணி

இதனிடையே, இறந்த ரமேஷின் தாயார் தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போடி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இதையடுத்து ரமேஷின் உடற்கூறு ஆய்வுக்கான அறிக்கை நேற்று வெளியானது. அதில் ரமேஷ் தற்கொலை செய்யவில்லை என்றும், அவரது கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிய வந்தது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்பு ரமேஷின் உடல் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீஸார், ரமேஷின் மனைவி கிருஷ்ணவேணியிடம்  விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் குடித்து விட்டு தினமும் தன்னுடன் சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் என்றும் கிருஷ்ணவேணி கூறியுள்ளார்.

அத்துடன், சம்பவ நாளான நேற்று முன்தினம் இரவு தனது கணவர் வழக்கம்போல் குடித்துவிட்டு தன்னுடன் சண்டையிட்டதாகவும், ஒரு கட்டத்தில் போதையில், கதவை அடைத்துக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறியுள்ளார்.

போடி காவல் நிலையம்
போடி காவல் நிலையம்

இதில் கிருஷ்ணவேணியிடம் இருந்து வந்த பதில் போலீஸாருக்கு திருப்தி அளிக்காததால் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், பல  அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. நேற்று முன் தினம் இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ரமேஷுக்கும், அவரது மனைவி கிருஷ்ணவேணிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த மனைவி மது போதையிலிருந்த  கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலைத் தூக்கிலிட்டுள்ளார். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நாடகமாடியதும், போலீஸாரின்  விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக  மரணத்தைக்  கொலை வழக்காகப் பதிவு செய்த போடி நகர் போலீஸார்  கிருஷ்ணவேணியை  கைது செய்தனர். சொத்துக்காக மதுபோதையில் இருந்த கணவனை மனைவியே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in