சென்னை தனியார் பள்ளி காவலாளி மர்ம மரணம்... காவல் ஆணையர் அலுவலகத்தில் மனைவி பரபரப்பு புகார்!

உயிரிழந்த சிவா
உயிரிழந்த சிவா

சென்னையில் பிரபல தனியார் பள்ளியில் காவலாளி தூக்கிட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர் சரிதா (30). இவரது கணவர் சிவா மற்றும் இரு பிள்ளைகளுடன் கடந்த 15 ஆண்டு காலமாக சென்னை கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில்(DAV) தங்கி காவலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த 8 வருடத்திற்கு முன்பு கோபாலபுரம் டிஏவி ஆண்கள் பள்ளிக்கு எதிரே பெண்கள் பள்ளி ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து சிவாவின் மனைவி சரிதா அங்கு காவலாளியாக பணிக்கு சேர்ந்தார். மேலும் இவர்களது மகள் சோபிதா(10) அதே பெண்கள் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி இரவு வழக்கம் போல் சிவா பணிக்கு சென்றார். காலை 6 மணிக்கு வழக்கம் போல் தன் மனைவியிடம் செல்போனில் பேசும் சிவா, அன்று எதுவும் பேசாததால் சந்தேகமடைந்த சரிதா, சிலம்பம் வகுப்புக்கு சென்ற மகளிடம் அப்பாவை பார்த்து போன் செய்ய சொல்லுமாறு கூறி அனுப்பினார்.

சிவா தூக்கிட்ட நிலையில் மரணம்
சிவா தூக்கிட்ட நிலையில் மரணம்

மகள் சோபிதா தந்தை இருக்கும் அறைக்கு சென்று பார்த்த போது அவர் கழுத்தில் கயிறு கட்டி தொங்கிய படி இருந்ததை பார்த்து உடனே ஓடிவந்து தனது தாயிடம்‌ தெரிவித்தார். உடனே சரிதா பதறி அடித்து கொண்டு சென்ற பார்த்த போது, கணவர் சிவா ரத்த வெள்ளத்தில் முட்டி போட்டவாறு கயிற்றில் தொங்கியபடி இருந்ததை கண்டு கதறி அழுதார்.

பின்னர் அங்கு ஓடிவந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனே ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் ராயப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சிவாவின் பிரேதத்தை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீஸார் சரிதாவிடம், கணவர் உடலை ஒப்படைக்க வேண்டும் என்றால் உடனே இந்த பேப்பரில் கையெழுத்து போடுமாறு கூறியதாகவும், அப்போது சரியான மனநிலையில் இல்லாத சரிதா போலீஸார் கூறியதை நம்பி அவர்கள் கூறிய இடங்களில் கையெழுத்திட்டதாக தெரிகிறது.

அதன்பின் சரிதா கணவர் சிவாவின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று உறவினர்கள் உதவியுடன் நல்லடக்கம் செய்து‌விட்டு மீண்டும் சென்னைக்கு வந்தார். இந்நிலையில் நேற்று கணவர் இறப்பு தொடர்பான முதல் தகவல் அறிக்கை சரிதாவுக்கு கிடைத்தது. அதில் கடன் பிரச்சனை காரணமாக கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்..

மேலும் சம்பவம் நடந்த தினத்தன்று காலை தான் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் மனு அளித்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் மிகுந்த மனவேதனைக்கு உள்ளான சரிதா, தான் புகாரே கொடுக்காத பட்சத்தில் எனது கணவர் கடன் தொல்லையால் தற்கொலைதான் செய்து கொண்டார் என்றும், அவரது இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை என்று நான் புகார் அளித்தாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சம்மந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரிதா, “என் கணவர் மரணத்தில் நான் புகார் அளிக்காத நிலையில் காவல்துறையினர் அவசர அவசரமாக என் கணவர் கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் என்‌ கணவர் உடலில் ரத்த காயங்களும், இறந்த இடத்தில் ரத்த கரைகளும் இருப்பது மேலும் சந்தேகத்தை‌ வலுப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும்‌ பள்ளியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் அதனை ஆய்வு செய்து சம்பவம் நடந்த அன்று யாரேனும் வந்து சென்றார்களா என்பதை போலீஸார் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும்” என அவர் கண்ணீர் மல்க கூறினார்

இதையும் வாசிக்கலாமே...

வெயில் காலங்களுக்கு எனர்ஜி தரும் சூப்பர் பானங்கள்!

ஒரே பள்ளியில் பயின்ற 13 இரட்டையர்களும் பத்தாம் வகுப்பில் பாஸ்!

லாரியின் உள்ளே ரகசிய அறை வைத்து எடுத்துச் சென்ற ரூ.8 கோடி... ஆந்திராவில் பரபரப்பு!

சென்னை வந்தும் சூர்யாவின் பெற்றோரை பார்க்காத ஜோதிகா... பற்றி எரியும் குடும்பப் பிரச்சினை!

இளையராஜா தன் வழக்கு மூலம் புது டிரெண்டை உருவாக்குகிறார்... வழக்கறிஞர் அதிரடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in