இன்று 7-வது நாள்... ஆற்றில் பொம்மையை விட்டு சைதை துரைசாமியின் மகனைத் தேடும் போலீஸார்!

வெற்றி துரைசாமியை தேடும் பணி 7வது நாளாக தொடர்கிறது
வெற்றி துரைசாமியை தேடும் பணி 7வது நாளாக தொடர்கிறது

இமாச்சல் பிரதேசத்தில் சட்லஜ் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் நிலை என்ன என்பது தெரியாத நிலையில், 7-வது நாளாக போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையின் முன்னாள் மேயரும், அதிமுக பிரமுகருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. திரைப்பட இயக்குநரான இவர், ’என்றாவது ஒருநாள்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவர் தற்போது த்ரில்லர் ஜானரில் படம் ஒன்றை இயக்குவதற்கான முயற்சியில் இறங்கி இருந்தார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு தளங்களை பார்வையிடுவதற்காக, திருப்பூரைச் சேர்ந்த உதவியாளர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு சென்றிருந்தார் வெற்றி. அங்கு கார் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு, ஓட்டுநர் டென்சின் என்பவருடன் சிம்லாவிற்குச் சென்று கொண்டிருந்தார் வெற்றி.

சட்லஜ் ஆற்றில் மாயமான வெற்றி துரைசாமி குறித்து இதுவரை தகவல் இல்லை
சட்லஜ் ஆற்றில் மாயமான வெற்றி துரைசாமி குறித்து இதுவரை தகவல் இல்லை

கசாங் நலா என்ற பகுதி அருகே கார் சென்றபோது, ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்தது. இது குறித்த தகவல் அறிந்ததும் போலீஸார் ஆற்றுக்குள் விழுந்த காரை கயிறு கட்டி மீட்டனர். அதில் ஓட்டுநர் டென்சின் பிணமாக மீட்கப்பட்டார். காரில் இருந்த கோபிநாத் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால், இதே காரில் பயணித்த வெற்றியின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

பொம்மையை ஆற்றில் விட்டு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை
பொம்மையை ஆற்றில் விட்டு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை

வெற்றி குறித்து எந்தத் தடயமும் சிக்காத நிலையில் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். வெற்றி குறித்து தகவல் தருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் தருவதாக அறிவிக்கப்பட்டும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதனிடையே விபத்து நடந்த இடத்தில், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஆற்றுக்குள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேடி பார்த்தும் வெற்றி துரைசாமி கிடைக்கவில்லை. அதே பகுதியில் மூளையின் திசு ஒன்று கிடைத்துள்ள நிலையில், அது வெற்றி துரைசாமி உடையதா என்பதை கண்டறிவதற்காக டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி சைதை துரைசாமியின் டிஎன்ஏ சேகரிக்கப்பட்டு, இரண்டு டிஎன்ஏ-க்களும் சென்னைக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வெளிவந்தால் மட்டுமே வெற்றியின் விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வர முடியும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆற்றிலிருந்து வெற்றியின் ஐபோன், அவருடைய சூட்கேஸ், உடமைகள் அடங்கிய பை ஆகியவை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இன்னமும் தேடுதல் வேட்டையைத் தொடரும் இமாச்சல் போலீஸார், தற்போது புதிய உத்தியின் மூலம் தேடுதல் வேட்டையை தொடங்கி இருக்கிறார்கள்.

அதன்படி, வெற்றியின் உடல் எடை கொண்ட பொம்மை ஒன்றை ஆற்றில் வீசி, அது எந்தப் பாதையில் பயணிக்கிறது என்பதை ஆய்வு செய்து அதன் மூலம் வெற்றியை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தேடுதல் வேட்டையில் உள்ளூர் பொதுமக்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சட்லஜ் ஆற்றில் உள்ள கசாங் நலா என்ற நீர்வீழ்ச்சி மிகவும் ஆபத்தான நீர்வீழ்ச்சியாக கருதப்படுகிறது. இந்த ஆற்றல் சிக்கியவர்களில் வெகு சிலரது உடல் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால் சைதை துரைசாமியின் குடும்பத்தினர் பெரும் கவலை கொண்டுள்ளனர். இருப்பினும் வெற்றி பத்திரமாக மீண்டு வருவார் என அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in