பெண் கடத்தல் வழக்கில் ஜேடிஎஸ் எம்எல்ஏவும், ஆபாச வீடியோ வழக்கில் தேடப்படும் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையுமான எச்.டி.ரேவண்ணாவை, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இன்று கைது செய்தனர்.
முன்னாள் பிரதமரான எச்.டி.தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான ரேவண்ணா மற்றும் அவரது நம்பிக்கைக்குரிய சதீஷ் பாபன்னா என 2 பேர் மீது பெண் கடத்தல் புகாரின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகன் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார் எழுப்பியதற்காக, தனது வீட்டின் முன்னாள் பணிப்பெண்ணை கடத்தியதாக ரேவண்ணா மீதான குற்றச்சாட்டு விரிகிறது.
2 தினங்களுக்கு முன்னர் அந்த பெண் கடத்தப்பட்டதாக, அப்பெண்ணின் மகன் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடத்தப்பட்ட பெண்ணையும் தற்போது போலீஸார் விரைந்து கண்டுபிடித்துள்ளனர். அவர் விரைவில் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஆஜராகி விளக்கமளிப்பார் எனத் தெரிகிறது.
ஆபாச வீடியோக்கள் வழக்கு தொடர்பாக ஜேடிஎஸ் எம்எல்ஏ எச்.டி.ரேவண்ணா மற்றும் அதே கட்சியின் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரின் இடைக்கால ஜாமீன் மனுவை பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. இதையடுத்து ரேவண்ணாவின் கைது அமைந்தது.
எச்.டி.ரேவண்ணா மீது பதியப்பட்ட கடத்தல் வழக்கின் படி, அப்பெண் ரேவண்ணா வீட்டில் சுமார் 5 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். மேலும் 3 ஆண்டுகளுக்கு முன்னதாக அந்த வேலையை விட்டுவிட்டார். ஏப்ரல் 26 ஆம் தேதி ரேவண்ணாவின் உதவியாளர் சதீஷால் அப்பெண் அவரது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அன்றிலிருந்து காணவில்லை என்றும் அவரது மகன் காவல்துறை புகாரில் தெரிவித்து உள்ளார். பெங்களூருவில் உள்ள கே.ஆர்.நகர் காவல்நிலையத்தில் கடத்தல் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதனிடையே கடத்தப்பட்ட பெண் உட்பட ஏராளமான பெண்களுடன் நெருக்கமான வீடியோக்களில் தோன்றியதாக, பிரஜ்வல் ரேவண்ணாவின் சுமார் 3000 வீடியோக்கள் கர்நாடகத்தை அதிரச்செய்தன. இந்த பெண்களை மிரட்டியும், அதிகாரத்தை பயன்படுத்தியும் பிரஜ்வல் ரேவண்ணா பலாத்காரம் செய்திருக்கிறார். தனக்கு எதிரான புகார்கள் விஸ்வரூபமெடுத்ததும், பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு பறந்துச் சென்றுவிட்டார். அவரைப் பிடிக்க சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் வாசிக்கலாமே...
ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!
தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!
மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!
200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!
கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!