ஆன்லைனில் நம்ப முடியாத விலையில் பட்டாசு: எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்!

சைபர் கிரைம் போலீஸ்
சைபர் கிரைம் போலீஸ்

ஆன்லைனில் குறைந்த விலையில் பட்டாசு விற்பனை செய்வதாக கூறி மோசடிகள் நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு தமிழ்நாடு காவல்துறை இணையதள குற்றப்பிரிவு( சைபர் கிரைம்) தலைமையகம் எச்சரித்துள்ளது.

இணையமோசடி
இணையமோசடி

இதுகுறித்து சைபர் கிரைம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீபாவளிப் பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், இதனைப் பயன்படுத்திக் கொண்டு சைபர் குற்றவாளிகள் சிலர் போலி இணையதளங்களை உருவாக்கி நம்பமுடியாத விலையில் பட்டாசுகளை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்கள் இந்த மோசடித் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என தமிழக காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்கள் யூடியூபில் நம்ப முடியாத மிக குறைந்த விலையில் பட்டாசு கிடைப்பதாக வரும் விளம்பரங்களைப் பார்த்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தொடர்பு கொண்டு ஆர்டரைப் பற்றி விசாரிக்கின்றனர்.

அப்போது கஸ்டமர் கேர் சார்பில் பேசும் நபர் அவர்களுக்கு பதிலளித்து பின்பு தாங்கள் ஆர்டர் செய்த ஸ்கிரீன் ஷாட்டைப் பகிருமாறு தெரிவிக்கின்றனர். உடனே பொதுமக்கள் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள https://luckycrackers.com/ என்ற இணையதளத்திற்குச் சென்று ஆர்டரைச் செய்த பின்பு வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு ஆர்டரின் ஸ்கிரீன் ஷாட்டை அனுப்புகின்றனர்.

இணையமோசடி
இணையமோசடி

ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன், இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட தொடர்பு எண் மற்றும் இணையதளத்தை மோசடி கும்பல் முடக்கி விடுகிறது. இவ்வாறு குறைந்த விலையில் பட்டாசு விற்பனை செய்வதாக கூறி மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தமிழக காவல்துறை சைபர் கிரைம் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1 மாதத்தில் மட்டும் இது தொடர்பாக 25 வழக்குகள் பதிவாகியுள்ளது. எனவே நீங்கள் வாங்கும் இணைய தளத்தின் சட்டபூர்வமான தன்மை, வாடிக்கையாளர் மதிப்புரை, அலுவலக முகவரி, மற்றும் தொடர்பு எண்ணுக்கான லேன்ட்லைன் எண் இணையதளத்தில் உள்ளதா எனச் சரிபார்த்து பணத்தை செலுத்தி வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ‌. குறிப்பாக, பிரபலம் இல்லாத இணையதளங்களுக்கு, கேஷ் ஆன் டெலிவரி விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

மேலும் போலி இணையதளத்தில் ஏதேனும் தனிப்பட்ட தகவலைப் பகிர்ந்திருந்தால், உடனே கடவுச் சொற்களை மாற்றி வங்கிக் கணக்குகளைக் கண்காணிப்பது அவசியம்.

ஸ்கிரீன் ஷாட் மின்னஞ்சல் தகவல் தொடர்புகள் மற்றும் இணையதளத்தில் உள்ள தொடர்பு விவரங்கள் உட்பட உங்கள் பரிவர்த்தனைகளின் பதிவுகளை வைத்திருந்த வேண்டும், மோசடி குறித்து புகாரளிக்க வேண்டும் என்றால் இந்தப் பதிவுகள் முக்கியமானது.

இந்த மோசடியில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் உடனே சைபர் கிரைமின் கட்டணமில்லா உதவி எண் 1930-ஐ தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் அல்லது www.cybercrime.gov.inஎன்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்யலாம்" என காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in