உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூரில் பாஜக தலைவர் பிரமோத் யாதவ், பைக்கில் வந்த மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூரைச் சேர்ந்தவர் பிரமோத் யாதவ். இவர் பாஜக விவசாய சங்க மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை வீட்டில் இருந்து வெளியே செல்வதற்காக காரில் சென்றார். போதாபூர் கிராமத்தில் அவர் சென்ற போது பைக்கில் வந்த மர்மநபர்கள், பிரமோத் யாதவை கையைக் காட்டி நிறுத்தியுள்ளனர்.
இதனால் அவர் காரை நிறுத்தவும், பைக்கில் இருந்தவர்கள் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக பிரமோத் யாதவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து சிகராரா காவல் நிலைய போலீஸார், பிரமோத் யாதவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை குறித்து ஜான்பூர் போலீஸ் சூப்பிரண்ட் பிரிஜேஷ் குமார் கூறுகையில், " பிரமோத் யாதவ் காரில் சென்ற போது பைக்கில் வந்தவர்கள் காரை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். இதனால் காரை நிறுத்திய அவர் மீது நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி யாதவ் உயிரிழந்தார். அவரை கொலை செய்தவர்கள் சிறிது தூரத்தில் அவர்கள் வந்த பைக்கை விட்டு விட்டு தப்பியுள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளிகளைத் தேடி வருகிறோம்" என்றார்.
பட்டப்பகலில் பாஜக தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஜான்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
#BREAKING: நடிகர் அஜித்குமார் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!
அதிர்ச்சி... பாகிஸ்தானை விட மோசம்... இந்தியாவில் 67,00,000 குழந்தைகள் பட்டினியால் அவதி!
ஆட்சிக்கு ஆபத்தா?! கலங்கும் உடன்பிறப்புகள்... தஞ்சை பெரியகோயில் அகழியில் பயங்கர தீ விபத்து!
அடுத்த அதிர்ச்சி...17 வயது மாணவியை கடத்திச் சென்று 3 பேர் கூட்டுப் பலாத்காரம்!