சென்னையில் தனியார் கல்லூரி மேலாளரிடம் 1.50 கோடி ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் ஹவாலா பணம் கடத்தல் மன்னன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் பகுதியச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் தனியார் கல்லூரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2-ம் தேதி 1.50 கோடி ருபாய் பணத்துடன் மயிலாப்பூர் சாய்பாபா கோயில் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 9 பேர் கொண்ட கும்பல், வினோத்குமாரை வழிமறித்தது. அத்துடன் சரமாரியாக கத்தியால் தாக்கி விட்டு அவரிடம் இருந்த 1.50 கோடி ரூபாயை பறித்துச் சென்றது.
இதனால் காயமடைந்த வினோத்குமார், காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் இரவு ரோந்து பணியில் இருந்த மைலாப்பூர் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டதுடன் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
இந்நிலையில் காவல் நிலையத்தில் தன்னிடமிருந்து 2.5 லட்சம் ரொக்கம் வழிப்பறி செய்யப்பட்டதாக வினோத் குமார் புகார் அளித்தார். காவல் கட்டுப்பட்டு அறைக்கு ஒன்றரை கோடி ரூபாய் வழிப்பறி செய்ததாக தெரிவித்த நிலையில், 2.5 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்ததாக புகார் அளித்த சம்பவம் போலீஸாரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் மயிலாப்பூர் போலீஸார் உண்மையில் வழிப்பறி செய்யப்பட்டது 1.50 கோடியா அல்லது இரண்டரை லட்சமா என்பது குறித்து வினோத்திடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, தேர்தல் நேரம் என்பதால் இரண்டு லட்சம் பறிபோய் விட்டதாக தகவல் தெரிவித்ததாகவும் உண்மையில் 1.50 கோடி ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டதாகவும் வினோத்குமார் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தனிப்படை போலீஸார் குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் திருத்தணி மற்றும் அரக்கோணம் பகுதிகளில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மயிலாப்பூர் தனிப்படை போலீஸார் திருத்தணி மற்றும் அரக்கோணத்திற்கு சென்று அங்கு ஒரு வீட்டில் பதுக்கி இருந்த 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த திலீப்(33), தினேஷ்குமார்(24), திருத்தணியைச் சேர்ந்த நவீன்(24), சுனில் குமார்(32) மற்றும் வேலூரைச் சேர்ந்த இம்ரான்(40), விக்ரம்(38), யோகேஷ்(25), நொச்சிநகரைச் சேர்ந்த அசோக் குமார்(32), உலகநாதன்(34) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம், 4 இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில் ஹவாலா பணம் கடத்தல் மன்னன் இம்ரான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்த இந்த வழிப்பறி கொள்ளையை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக ஹவாலா பணத்தைக் கொண்டு செல்லும் நபர்களைக் கண்டறிந்து ஸ்கெட்ச் போட்டு வழிப்பறியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் கைதான அனைவரும் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், வழக்கறிஞர்கள் மூன்று பேர் இது போன்ற வழிப்பறி சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் இவ்வழக்கில் மூளையாக செயல்பட்ட வழக்கறிஞர்கள் உட்பட மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!
முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?
தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!
பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு