தலித் அரசியல் ரஜினிக்குத் தெரியுமா என்ற பொருள்படும்படி எழுப்பப்பட்ட கேள்விக்கு இயக்குநர் இரஞ்சித் நக்கலாக சிரிக்கும் வீடியோ இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. இதனால், ரஜினி ரசிகர்கள், இயக்குநர் இரஞ்சித் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ஆவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
’அட்டக்கத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் இயக்குநர் இரஞ்சித். தலித் அரசியலை தனது படங்களில் தொடர்ச்சியாகப் பேசி வருபவர். நடிகர் ரஜினியுடன் ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களில் இணைந்தார். இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
படங்களில் மட்டுமல்லாது நீலம் பண்பாட்டு மையம் என்ற பெயரில் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறார் இரஞ்சித். அப்படி, அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதம் தலித் வரலாற்று மாதமாக நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தலித் திரைப்பட விழாக்கள், இலக்கிய விழா என பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் என ஏப்ரல் மாதம் முழுவதுமாக இயக்குநர் இரஞ்சித் தலைமையில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இதில், தலித் திரைப்படங்களைக் கொண்டாடும் விதமான படங்களைத் திரையிடல் நிகழ்வும் நடைபெறும். பின்பு, இயக்குநர்களின் விவாதமும் இருக்கும். அப்படியான நிகழ்வில், மலையாள இயக்குநர் பிஜூ தாமோதரன் மற்றும் இரஞ்சித் இடையே நடைபெற்ற உரையாடல் காட்சிகள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இரஞ்சித் படங்களில் நடிப்பதைப் பாராட்டும்படியாகக் குறிப்பிட்டார்.
அதோடு நிறுத்தாமல், இரஞ்சித் பேசும் அரசியல் ரஜினிக்கு தெரியுமா என்பது சந்தேகம் தான் என அவர் பேச, அதற்கு நக்கலாக இரஞ்சித் சிரித்துள்ள வீடியோ தான் சர்ச்சைக்குக் காரணம்.
’இரஞ்சித்தின் அரசியலில் இருந்து ரஜினிகாந்த் வேறுபட்டு இருக்கலாம். ஆனால், அதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் அவருக்கு படம் செய்திருக்கிறார். இதை இரஞ்சித் எதிர்கொண்ட விதம் சரியில்லை’ என்று கொதித்து எழுந்துள்ளனர் ரசிகர்கள்.
மேலும், ‘ரஜினிக்கு இது இன்னொரு படம். ஆனால், இதுதான் தனக்கு எதிர்காலம்’ என்று சொல்லி ரஜினியிடம் படம் ஒப்புக்கொள்ள இரஞ்சித் வேண்டுகோள் விடுத்தது பற்றி ரஜினி முன்பு பேசிய காணொளியையும் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும், ரஜினி ‘கபாலி’, ‘காலா’ படங்களுக்கு முன்பே தன் படங்களில் தலித் அரசியல் பேசியவர் என்று சில பழைய படங்களின் வீடியோக்களைப் பகிர்ந்து வருபவர்கள், இரஞ்சித் ரஜினியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், ‘நன்றி கெட்ட ரஞ்சித்’ என்றும் ட்விட்டர் டேக்கில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
+2க்கு பிறகு என்ன படிக்கலாம்? வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்... ஸ்காலர்ஷிப் விவரங்கள்!
ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்... பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி!
தடுப்புகளைத் தாண்டி இனிப்புக் கடைக்குச் சென்ற ராகுல்... ஸ்டாலினுக்கு வழங்கி அன்புப் பரிமாற்றம்!
தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்களின் டார்கெட்... கரூரை கைப்பற்றப் போவது யாரு? கள நிலவரம் இதுதான்!