அரசு பேருந்தில் பயணித்த காவலர், டிக்கெட் எடுக்க முடியாது என்று நடத்துநரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலானதை அடுத்து போக்குவரத்து துறை அதிரடியான ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் நாங்குநேரி பேருந்து நிறுத்தத்தில் ஆறுமுகப்பாண்டி எனும் காவலர் ஏறியுள்ளார். அவரிடம் டிக்கெட் எடுக்கும்படி நடத்துநர் கேட்டுள்ளார். "தானும் ஒரு அரசு ஊழியர் தான். டிக்கெட் எல்லாம் எடுக்க முடியாது" என்று ஆறுமுகப்பாண்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், "அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் எவரும் பணி நிமித்தமாக பயணிக்கும்போது டிக்கட் எடுக்க தேவையில்லை. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கு டிக்கெட் கிடையாது" என்று டிக்கெட் எடுக்காமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அதற்கு, "அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வேண்டும் என்றால் வாரண்ட் வேண்டும். வாரண்ட் இல்லாத பட்சத்தில் டிக்கெட் கிடையாது. அதனால், டிக்கெட் கண்டிப்பாக எடுக்க வேண்டும்" என்று நடத்துநர் சொல்லியும் காவலர் கேட்கவில்லை. இதுதொடர்பான வீடியோ நேற்று வெளியாகி வைரலானது. அரசு பேருந்தில் காவலர்கள் டிக்கெட் எடுக்க வேண்டுமா.. வேண்டாமா.. என்று சர்ச்சை எழுந்த நிலையில், இதுதொடர்பாக போக்குவரத்து துறை விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் டிக்கெட் எடுத்துதான் பயணிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வங்கக்கடலில் புயல் சின்னம்... தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டப் போகிறது கனமழை!
சோகம்... போலீஸ்காரருடன் தூக்கில் தொங்கிய இளம்பெண்!
காதலித்ததால் ஆத்திரம்... தங்கையை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த அண்ணன்கள்
மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பு... ரூ.1,978 கோடியிலிருந்து ரூ.2,021 கோடிகளாக உயர்வு!