இலங்கை கிரிக்கெட் வாரியம் 
விளையாட்டு

மோசமான தோல்வி... இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக போராட்டம்?

காமதேனு

இலங்கை அணியின் தொடர் தோல்வியால் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றுகூடி கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படலாம் என தகவல்கள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 31-ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியின் முடிவு இலங்கை அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துமளவுக்கு அமைந்தது. இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் மற்றும் அபாரமான பந்துவீச்சு காரணமாக இலங்கை அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 357 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் வெறும் 55 ரன்களை மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது.

ஷாமி சில்வா, இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர்

இந்திய அணியின் இந்த வெற்றி 48 ஆண்டுகால உலகக் கோப்பை தொடரில் மிகப் பெரிய வெற்றியாக கொண்டாடப்படுகிறது. அதேநேரம், இலங்கையின் இப்படி ஒரு மோசமான தோல்வியை இலங்கை ரசிகர்களால் தாங்கிகொள்ள முடியவில்லை. அதன் காரணமாக, சமூக வலைதளங்களில் இலங்கை கிரிக்கெட் வீரர்களையும், கிரிக்கெட் வாரியத்தையும் அவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், கிரிக்கெட் வாரிய தலைவர் ஷாமி சில்வா உட்பட அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக, கிரிக்கெட் ரசிகர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரிய அலுவலகத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையின் போராட்ட தடுப்பு பிரிவினர் அலுவலக கட்டிடத்தின் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், இலங்கையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

SCROLL FOR NEXT