பரசுராமன் 
அரசியல்

முன்னாள் எம்.பி பரசுராமன் திடீர் மரணம்... தஞ்சை திமுகவில் சோகம்!

காமதேனு

திமுகவைச் சேர்ந்தவரான தஞ்சாவூர் முன்னாள் எம்.பி. பரசுராமன் (63) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். 

பரசுராமன்

தஞ்சாவூர் மாவட்டம் நீலகிரி ஊராட்சிக்குட்பட்ட ரஹ்மான் நகர் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். கடந்த 1985 ம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த இவர், அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அதன் பின்னர் கடந்த 2001 முதல் தொடர்ந்து 3 முறை நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து  அதிமுகவில் இவருக்கு தஞ்சை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. 2014 தேர்தலில் திமுக சார்பில் களமிறங்கிய டி.ஆர்.பாலுவை எதிர்த்து போட்டியிட்டு தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முறை போட்டியிட்ட நிலையில் மக்கள் அவரை தேர்ந்தெடுத்தனர். 2014 முதல் 2019 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்து வந்த அவர்  முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளராக அறியப்பட்டவர்.  இதனைத் தொடர்ந்து வைத்திலிங்கத்துடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கடந்த 2021 ம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். 

கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு. பரசுராமன் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

பரசுராமன்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்த அவருக்கு பெரிதான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. கட்சியில்  ஒதுங்கிய நிலையில் இருந்து வந்த பரசுராமன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். 

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை செய்த நிலையில், கு.பரசுராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு ஏற்கனவே பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பரசுராமனுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

SCROLL FOR NEXT