அமலாக்கத்துறை 
அரசியல்

பரபரப்பு... அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

காமதேனு

டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று ஆஜராக உள்ளார். அவர் கைது செய்யப்படலாம் என்ற சந்தேகங்களும் பரபரப்பை உருவாக்கியுள்ளதால், தேசிய அரசியலில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த்தின் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

டெல்லி படேல் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் ராஜ்குமார் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில், பல இலாகாக்களை இவர் கவனித்து வருகிறார். அதில் சமூகநலத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்டவை அடங்கும்.

57 வயது அரசியல்வாதியான ராஜ்குமார் தனது ஆரம்பக் கல்வியை கற்பதற்காக, உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஒரு பூட்டு தொழிற்சாலையில் குழந்தைத் தொழிலாளியாக பணிபுரிந்தார். பின்னர் டியூஷன் எடுத்து, அதன் மூலம் தனது எம்.ஏ., படிப்பை முடித்தார். அரசியலில் சேருவதற்கு முன்னர், அவர் ரெக்சின் தோல் விற்பனையில் தொழிலதிபராக இருந்தார்.

பல்வேறு மக்கள் பணிகளை செய்து சமூக செயற்பாட்டாளராகவும் இருந்த ராஜ்குமார், பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஆனந்த்பாத் அறக்கட்டளையைத் திறந்து பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2011ம் ஆண்டு, அண்ணா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அரசியலில் ஆர்வம் கொண்டு அர்விந்த் கேஜ்ரிவால் தொடங்கிய ஆம் ஆத்மி கட்சியில் ராஜ்குமார் இணைந்தார்.

SCROLL FOR NEXT