உதயநிதி ஸ்டாலின் 
அரசியல்

கடந்த தேர்தலில் எய்ம்ஸ் செங்கல்... இந்த தேர்தலில் இபிஎஸ் போட்டோ - உதயநிதியின் அடடே பிரச்சார உத்தி!

காமதேனு

பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை காட்டி  மக்களிடம் அவர்கள் குறித்து எதிர்மறை பிரச்சாரம் செய்து வருகிறார் திமுக அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்.

எய்ம்ஸ் செங்கல் பிரச்சாரம்

திமுக இளைஞரணி செயலாளர், மற்றும் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், தனது தாத்தா கருணாநிதி மற்றும் தந்தை ஸ்டாலின் ஆகியோரைப்போல வெகு எளிதில் திமுகவினர் மற்றும் பொதுமக்களிடையே அறிமுகம் ஆகி உள்ளார். அவரது குடும்பப் பின்னணி காரணமாக வெகு எளிதில் அவரால் கட்சி மற்றும் ஆட்சியில் முக்கிய பதவிகளை பிடிக்க முடிந்தது.

குடும்பப் பின்னணி ஒருபக்கம் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவரது பேச்சு இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை கவர்ந்து வருகிறது. கடந்த மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலின்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியதோடு மத்திய அரசு எதையும் செய்யவில்லை. அதற்கு அப்போதைய அதிமுக அரசு எதையும் வலியுறுத்தவில்லை என்று இரண்டு தரப்பையும் சாடும் வகையில் ஒற்றை செங்கல்லை கையில்  எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ஊராக அவர் பிரச்சாரம் செய்தார்.

உதயநிதி பிரச்சாரம்

இந்த உத்தி மக்களிடம் மிகவும் நன்றாக ஈடுபட்டது. அப்போது பரபரப்பான அரசியல் பிரச்சாரமாகவும் இது பார்க்கப்பட்டது. அந்தத் தேர்தல்களில் மக்கள் ஆதரவு காரணமாக திமுக அமோக வெற்றி பெற்றது. மனதிற்குப் பட்டதை உடனடியாக பேசிவிடும் குணம் கொண்டவராக உதயநிதி இருக்கிறார். அவரது பேச்சுக்கள் அகில இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தவும் தவறுவதில்லை. இதனால் அவரது தலைக்கு விலை வைக்கப்பட்டதும் நடந்தது.  அவர் மீது பல்வேறு ஊர்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் திமுகவுக்கு ஆதரவாக மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை  உதயநிதி தொடங்கியுள்ளார்.  கடந்த தேர்தலில் செங்கல்லை காட்டி எதிர்க்கட்சிகளை விமர்சித்ததுபோல இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் மோடியும் ஒன்றாக சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை காட்டி அவர்களை எதிர்மறை விமர்சனம் செய்து வருகிறார். 

புகைப்படம் காட்டி பிரச்சாரம் செய்யும் உதயநிதி

அதிமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி அமைத்துள்ளன என்று அவரும், அவரது தந்தையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். அதை நிரூபிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி திருச்சி பொதுக்கூட்டம் உட்பட எங்கும் பிரதமரையோ மத்திய அரசையோ விமர்சிக்கவில்லை என்பதையும் எடுத்துக்கூறி, இருவரும் சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை எடுத்துக்காட்டி உதயநிதி பிரச்சாரம் செய்து வருகிறார். இதுதான் இந்த தேர்தலில் உதயநிதியின் பிரச்சார உத்தியாக இருக்கிறது.  இதற்கு திமுகவினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!

அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!

SCROLL FOR NEXT