கேதர்நாத்தில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர் 
தேசம்

திக் திக் நிமிடங்கள்... அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்

காமதேனு

உத்தரகாண்ட் மாநிலத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் திடீரென அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏராளமான ஆன்மிக தலங்கள் உள்ள நிலையில் ஆன்மிக சுற்றுலா மிக முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக கேதர்நாத் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இவர்களின் வசதிக்காக கேதார்நாத் கோயிலில் இருந்து குப்த்காசி வரை தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ருத்ரபிரயாக் மாவட்டத்தின் கேதார்நாத் கோயிலில் இருந்து குப்த்காசி நோக்கி ஹெலிகாப்டர் ஒன்று ஐந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் அவசர அவசரமாக கேதார்நாத் கோயில் அருகே தரையிறக்கப்பட்டது.

கேதர்நாத்தில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் இது தொடர்பாக விமான போக்குவரத்துத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மோசமான வானிலையின் போது ஹெலிகாப்டர் கிளம்பியதே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளது. இருப்பினும் விசாரணையின் முடிவிலேயே இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT