கோவையில் மருத்துவர் ஒருவர் தனது உதவியாளர் உட்பட பலரிடம் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் பணம் வாங்கிக் கொண்டு தலைமுறைவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சித்தையா. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த இவர், கடந்த 1987ம் ஆண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருதயத்துறை பேராசிரியராகவும், அத்துறையின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார். கடந்த 2003ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற சித்தையா, அதன் பிறகு கோவையில் மூன்று இடங்களில் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் 12 ஆண்டுகளாக அவரிடம் பணியாற்றிய இசிஜி டெக்னீசியன் விஜயலட்சுமி என்பவருடன் அவருக்கு குடும்ப ரீதியாக பழக்கம் இருந்து வந்துள்ளது.
விஜயலட்சுமியிடம், தனது மனைவி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டில் படித்து வரும் தனது குழந்தைகளின் படிப்பு செலவிற்காகவும் 8 லட்ச ரூபாய் பணத்தை சித்தையா வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பாண்டு பத்திரத்தில் எழுதிக் கொடுத்ததோடு, கையெழுத்திட்ட காசோலைகளையும் கொடுத்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு வாங்கிய பணத்தை தற்போது வரை அவர் திருப்பிக் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும் விஜயலட்சுமி பேத்தியிடமும், 2 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இவரிடம் மருத்துவம் பார்த்தால் விரைவில் உடல் நலம் சரியாகிவிடும் என பொதுவான கருத்து நிலவி வந்துள்ளது. இதனால் கைராசியான மருத்துவர் என நம்பி, இவரிடம் காங்கேயம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் சிகிச்சைக்காக வந்து சென்றுள்ளனர். அவர்களிடமும் இதே போன்ற காரணத்தை சொல்லி லட்சக்கணக்கில் பணத்தை சித்தையா வாங்கிக் கொண்டு திருப்பி தராமல் இருந்து வந்துள்ளார்.
மேலும் கிளினிக்கிற்கு வரும் மருந்தக பிரதிநிதிகளிடமும் வாங்கிய மருந்துக்கு பணம் கொடுக்காமல் இதே காரணங்களை கூறி தட்டிக் கழித்து வந்துள்ளார். மேலும் அவர்களிடமும் பல லட்சம் ரூபாய் அளவிற்கு பணத்தை வாங்கிக் கொண்டு அவர் திருப்பி தராமல் இருந்து வந்துள்ளார்.
மருத்துவர் சித்தையா ஏமாற்றுவதை அறிந்த பாதிக்கப்பட்டோர், கடந்த நவம்பர் மாதம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், பணத்தை மீட்டுத்தரக் கோரி மனு அளித்திருந்தனர். இதை அறிந்ததும் சித்தையா தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் மனு அளித்துள்ளனர். புகார் அளித்து நான்கு மாதங்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் விரைந்து தங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதையும் வாசிக்கலாமே...
அர்விந்த் கேஜ்ரிவாலால் மிகவும் வருத்தப்படுகிறேன்.... மனம் திறந்தார் குருநாதர் அன்னா ஹசாரே!
நடிகை மகாலட்சுமிக்கு நள்ளிரவில் சர்ப்ரைஸ் கொடுத்த ரவீந்தர்!
நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்... தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!
தயாநிதி மாறனை எதிர்த்து பிரேமலதா போட்டி?: பரபரப்பில் மத்திய சென்னை தேர்தல் களம்!