சென்னை தீவுத்திடலைச் சுற்றி, பார்முலா 4 கார் ரேஸ் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு வெள்ளிக்கிழமை வழங்கப்படுகிறது.
சென்னை தீவுத்திடலைச் சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கார் பந்தயம் நடத்த அரசு 40 கோடி ரூபாயை செலவு செய்வது தவறு. சட்ட அனுமதியின்றி இந்த பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த பந்தயம் காரணமாக அரசுக்கு எந்த பலனும், லாபமும் இல்லை என்பதால் இந்த போட்டிக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கார் பந்தயம் நடத்துவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என அரசு தரப்பிற்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மழை, வெள்ளம் காரணமாக கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டதாகவும், ஜூன் மாதத்திற்கு பிறகு கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெற்றுள்ளதாகவும், ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அந்த இடத்தை கடக்கும்போது ஒலி கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும் எனவும், அதற்கு மருத்துவமனையும் அனுமதி அளித்துள்ளது எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை வரும் வெள்ளிக்கிழமை பிறப்பிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!
வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!
பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!