பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

பழங்குடியினர் பிரிவில் இருந்து நீதிபதியாக தேர்வாகியுள்ள ஸ்ரீபதி
பழங்குடியினர் பிரிவில் இருந்து நீதிபதியாக தேர்வாகியுள்ள ஸ்ரீபதி

திருவண்ணாமலையில் பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் சிவில் நீதிபதியாக 23 வயதேயான ஸ்ரீபதி என்பவர் தேர்வாகி இருப்பது பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள பழங்குடி கிராமமான புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி (23). ஏலகிரி மலையில் கல்வி கற்று, அதன் பின்னர் சட்டப் படிப்பை மேற்கொண்டு இருந்தார் . இடையில் அவருக்கு திருமணமான போதும், படிப்பைக் கைவிடாமல் தொடர்ந்து பட்டப்படிப்பை படித்து முடித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் பங்கேற்க முடிவு செய்து, அதற்காக தீவிரமாக படித்து வந்தார்.

நீதிபதி ஸ்ரீபதி
நீதிபதி ஸ்ரீபதி

இதனிடையே அவர் கர்ப்பம் தரித்திருந்த நிலையில், தேர்வு நடைபெறும் அன்றே அவருக்குக் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தேர்வுக்கு இரண்டு நாள் இருக்கும்போது, அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் அவர் தேர்வு எழுதுவது சிரமம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனாலும், பிற ஆண்களைப் போல் குழந்தை தான் முக்கியம் என்று முடிவெடுக்காமல், தன் மனைவியின் கனவை நிறைவேற்ற முடிவு செய்த ஸ்ரீபதியின் இணையர் வெங்கட்ராமன், ஒரு லட்சம் ரூபாய் செலவில் சாதாரண கார் ஒன்றை சொகுசு காராக மாற்றி ஸ்ரீபதியை தேர்வுக்காக அழைத்து சென்றுள்ளார்.

குழந்தையுடன் பெண் நீதிபதி ஸ்ரீபதி
குழந்தையுடன் பெண் நீதிபதி ஸ்ரீபதி

இந்த தேர்வு நடைபெற்று முடிந்து தற்போது முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் ஸ்ரீபதி வெற்றி பெற்று, பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக விரைவில் 6 மாத பயிற்சிக்கு ஸ்ரீபதி செல்ல உள்ளார். அவருக்குப் பல்வேறு தரப்பினரும் தொடர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பழங்குடியின மக்கள், யாருக்குத் தங்களின் வலி தெரியுமோ, உணர முடியுமோ, புரிந்து கொள்வார்களோ அவர்களே அந்த இடத்திற்குச் சென்றிருப்பது பெருமையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in