காங்கிரஸ் கூட்டணிக்காக காவிரி உரிமையை அடகு வைத்து விட்டீர்களா?... முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

மேகேதாட்டு அணை அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம் என்று சொல்லும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, அவர் காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம். அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார்.

ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டி.கே. சிவக்குமார்
டி.கே. சிவக்குமார்

பெங்களூரு (ஊரகம்) மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் தமது சகோதரர் டி.கே.சுரேஷை ஆதரித்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் பரப்புரை மேற்கொண்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்,''உங்களுடன் நான் பிசினஸ் டீல் பேச வந்திருக்கிறேன். நீங்கள் எனது சகோதரர் சுரேஷை வெற்றி பெறச் செய்தால், அவர் உங்களுக்கு காவிரியிலிருந்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வார்'' என்று பேசியிருக்கிறார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், “நல்லவழியிலோ அல்லது மோசடி செய்தோ மேகேதாட்டு அணையைக் கட்டி, அங்கிருந்து பெங்களூரு நகருக்கு குடிநீர் கொண்டு வருவோம் என்பதை அங்குள்ள மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே அவ்வாறு கூறினேன்'' என்று விளக்கமளித்துள்ளார்.

மேக்கேதாட்டு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், மோசடி செய்தாவது மேகேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கொக்கரிக்கிறார் என்றால், அணையை கட்டும் விஷயத்தில் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு அனுமதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு உள்ளிட்ட எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது. அதை காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும், உச்சநீதிமன்றமும் அனுமதிக்காது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனாலும் கூட மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே.சித்தராமையாவும் மாறி மாறி கூறி வருகின்றனர்.

இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதை தமிழர்களால் சகித்துக் கொள்ள முடியாது. கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வரின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரிகிறது.

ஆனால், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இது குறித்து எதுவுமே தெரியாதது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. உலகில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் அவர், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகேதாட்டு அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் வாய் மூடி மவுனியாக இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனத்த அமைதியை வைத்துப் பார்க்கும் போது, தமிழ்நாடு அரசை அமைதிப் படுத்தி விட்டு, மேக்கேதாட்டு அணையை கட்டுவதைத் தான், மோசடி வழியிலாவது பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு செல்வது என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறாரோ? என்ற ஐயம் எழுகிறது. திமுக அரசோ, முதல்வர் மு.க.ஸ்டாலினோ இந்த ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை.

1970-ஆம் ஆண்டுகளில் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார்.

2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை அப்போதைய முதல்வர் கருணாநிதி நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின், இப்போது மேகேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது திமுகவின் வழக்கம். இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு அடகு வைத்து விடக் கூடாது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதை உணர்ந்து மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும். நல்ல வழியிலோ, மோசடி வழியிலோ மேக்கேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதல்வர் சித்தராமையா ஆகியோரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர்களுக்கு இடையூறு... நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்!

என் மகனுக்கு தர்ற தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்... மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் தந்தை கதறல்!

நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்... ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!

உஷார்... வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லையில் நுழைய முயன்ற ட்ரோன்; பிஎஸ்எஃப் அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in