தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அரசியல் ஆசை இருந்தால், தமிழிசை சவுந்தரராஜன் போல பதவியை தூக்கி எறிந்துவிட்டு அரசியலிக்கு வந்து தேர்தலில் போட்டியிடட்டும். ஆளுநர் பதவியில் இருந்துகொண்டே அரசியல்வாதி போல செயல்படக்கூடாது" என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக திமுக அரசின் எண்ணங்களுக்கு மாற்றாகவே செயல்பட்டு வருகிறார். இப்போது கூட உச்ச நீதிமன்றம் கண்டித்த பிறகே, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து ஆளுநர் தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
இந்நிலையில், ”தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும். இல்லையெனில் குடியரசு தலைவர், ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'தமிழ்நாடு ஆளுநர் விதித்த தடைகளையெல்லாம் மீறி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக பொன்முடி அமைச்சராகி இருக்கிறார். உச்சநீதிமன்றத்துக்குத் தவறான தகவல்களை அளிப்பது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணிப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு மாறாக நடந்து கொள்வது, ஆளுநருக்கான மரபுகளை மீறி அரசியல் ரீதியாகத் தலையிடுவது என தொடர்ந்து சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் ஆளுநர்.
அவருக்கு அரசியலில் ஆர்வம் இருந்தால் தமிழிசையைப் போல ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்து தேர்தலில் நேரடியாகப் போட்டியிடட்டடும். அதை விட்டுவிட்டு ஆளுநர் பதவியில் இருந்துகொண்டே ஒரு அரசியல்வாதியைப் போல செயல்படுவதும், அரசமைப்புச் சட்டத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பதும் ஏற்புடையது அல்ல.
இப்போது உச்ச நீதிமன்றம் கண்டித்தது போல இதுவரை எந்த ஆளுநரையும் உச்ச நீதிமன்றம் இதுவரை கண்டித்தது இல்லை. “ஆளுநருக்கு சட்டம் தெரியுமா... தெரியாதா?” என்று கேட்ட உச்ச நீதிமன்றம், “பொன்முடிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததன் மூலம் உச்ச நீதிமன்றத்தை அவமதித்துள்ளார். முதல்வரின் தனிப்பட்ட அதிகாரத்தில் தலையிட்டுள்ளார். அரசியல் சாசனத்தை ஆளுநர் முறையாகப் பின்பற்றவில்லை” என்றெல்லாம் கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்து இருக்கிறது.
இதற்குப் பிறகும் ஆளுநர் பதவியில் அவர் தொடர்வது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே அவர் தாமே முன்வந்து பதவி விலக வேண்டும். ஆளுநர் பதவி விலகாவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைப் பாதுகாப்பதற்காக, அவரை குடியரசு தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
ராமேஸ்வரத்தில் மீனவர்களின் காலவரையற்ற போராட்டம் தொடங்கியது!
சரோஜாதேவி கால்ஷீட்டுக்கு காத்திருந்த எம்.ஜி.ஆர்!
10வது வேட்பாளரையும் அறிவித்தது பாமக... காஞ்சிபுரத்தில் களமிறங்குகிறார் ஜோதி வெங்கடேசன்!
அதிமுக வேட்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட திடீர் உத்தரவு!