தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய பிரபாகரனுக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நா தழுதழுக்க பேசினார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளரும், வேட்பாளரின் தாயுமான பிரேமலதா விஜயகாந்த் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று இரவு அவர் அவனியாபுரம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், " உங்கள் வீட்டு பெண்ணாக உங்கள் சகோதரியாக உங்களிடத்தில் வாக்குகள் கேட்டு வந்துள்ளேன். மதுரை வரும்போதெல்லாம் கேப்டனுடன்தான் வந்துள்ளேன். அவர் இல்லாமல் தற்போது வந்து உங்களைச் சந்திக்கும் போது மனமெல்லாம் துக்கம் அடைக்கிறது. எங்களுடைய வாழ்க்கை எல்லாமே இந்த விருதுநகர் தொகுதிதான். உங்கள் வீட்டுப்பிள்ளையாக கேப்டனின் பிள்ளையை மகத்தான முறையில் வெற்றி பெற நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
கணவன் இல்லை என்றால் அந்த பெண் எவ்வளவு பிரச்சினைகளைச் சமாளிப்பார் என்று தாய்மார்களுக்குத் தெரியும். சமூகத்தில் எவ்வளவு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். கேப்டன் மிகப்பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்துவிட்டு போயிருக்கிறார். அவர் விட்டுச்சென்ற பணிகளை உங்களுக்கு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் 32 வயதுடைய என் மகனை உங்களுக்காக போட்டியிட வைத்துள்ளேன். விஜய் பிரபாகரன் இனிமேல் எனது மகன் மட்டுமில்லை. இந்த விருதுநகர் தொகுதியில் வாழும் அனைத்து தாய்மார்களுக்கும் மகன்தான்.
விஜய பிரபாகரனுக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. விஜயகாந்த் விருதாச்சலம் எப்படி முதல் வெற்றி பெற்றாரோ, அதே போல் விஜய பிரபாகரனுக்கு இந்த விருதுநகர் தொகுதி வெற்றியை தர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். வெற்றி பெற்ற பிறகு அவருக்கு திருமணம் நடந்தால், இந்த விருதுநகர் தொகுதி மக்களின் ஆசீர்வாதத்துடன்தான் நடக்கும்” என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!
நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!
மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!