சேலம் அருகே பொது மயானம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், மக்களவைத் தேர்தலை பொதுமக்கள் புறக்கணித்தனர். இதனால் வாக்குப்பதிவு துவங்கிய 7 மணி நேரத்தில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பதிவாகியுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு செங்கலுத்துப்பாடி கிராம மக்கள் பல ஆண்டுகளாக பொது மயான வசதி கேட்டு போராடி வருகின்றனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி இருந்தனர். ஆனால் அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், இதனை கட்டாயம் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்து இருந்தனர். இதனால் பொதுமக்கள் அந்த தேர்தலில் வாக்குகளை செலுத்தியிருந்தனர். ஆனால் மூன்று வருட காலம் கடந்த பின்னும் இதுவரை தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதையொட்டி கருப்புக்கொடி கட்டியும், பேனர்கள் வைத்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அப்போது அங்கு வந்த அரசு அதிகாரிகள், தனியார் வசமுள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் முள்வேலியை அகற்றி தருவதாகவும், தேர்தல் முடிந்தவுடன் அந்த இடத்தில் பொது மயான வசதி ஏற்படுத்தித் தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர். அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
இதனால் ஐந்து பேர் கொண்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் காலை முதல் இந்த மையத்தில் எவ்வித வேலையும் இன்றி காத்திருக்கின்றனர். இதுவரை அந்த வாக்குச்சாவடி மையத்தில் பிஎல்டு எனும் அலுவலரின் ஒரு ஓட்டு மட்டுமே பதிவாகியுள்ளது. இது தவிர வேறு யாரும் வாக்களிக்க வரவில்லை. எந்த அதிகாரியும் பேச்சுவார்த்தைக்கு வராததால், தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!
வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!
வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!
பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!
ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!