திமுக வேட்பாளருக்காக விநியோகம்... கையில் பணத்துடன் சிக்கிய நபர்... கோவையில் பரபரப்பு!
கோவையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர் திமுகவிற்காக பணப்பட்டுவாடா செய்தாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் தேர்தல் முறைகேடுகளின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பின் மூலம் இதுவரை தமிழ்நாட்டில் 460 கோடி ரூபாய்க்கும் மேல் பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட உக்கடம் பகுதியில் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், துணை ராணுவப் படையினர், போலீஸார் உள்ளிட்டோர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் பணப்பட்டுவாடா செய்த நபர்கள் யாரும் சிக்கவில்லை.
இதனிடையே கோவை கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சுப்பிரமணியம்பாளையம் பகுதியில், வீடு ஒன்றில் வைத்து வெளி மாவட்ட நபர் ஒருவர் பணப்பட்டுவாடா செய்வதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிந்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது, வாலிபர் ஒருவர் கையில் பணத்துடன், பூத் ஸ்லிப்புகளை சரி பார்த்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரித்த போது அதே பகுதியைச் திமுக பிரமுகரான சம்பத் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்குமாறு கூறியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். அங்கு வந்த பாஜகவினர் அந்த நபரை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீஸில் ஒப்படைத்தனர்.
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவரது பெயர் மனோஜ் (23) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 42,500 ரூபாய் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரை துடியலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பத் எனும் நபர் திமுகவில் தான் இருக்கிறாரா என்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!
நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!
மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!