கர்நாடக பாஜகவில் கடந்த சில வாரங்களாக கலகமூட்டி வந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய, கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ஈஸ்வரப்பாவை கட்சித் தலைமை 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.
“கட்சியின் அறிவுறுத்தலை மதிக்காமல், ஷிவமொக்கா மக்களவைத் தொகுதியில் ஈஸ்வரப்பா வேட்பாளராகப் போட்டியிட்டு கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார். இது கட்சி ஒழுங்கை மீறும் செயலாகும். எனவே அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். மேலும் ஆறு ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்” என்று கர்நாடக பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் லிங்கராஜ் பாட்டீல் கையெழுத்திட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு முடிவடைந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, இன்றிரவு இந்த முடிவு வெளியானது.
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இழந்த கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகத்தில் ஈஸ்வரப்பாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஷிவமொக்கா தொகுதியில் மே 7 அன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
முன்னதாக ஹாவேரி தொகுதியில் அவரது மகன் கே.இ.காந்தேஷுக்கு கட்சி டிக்கெட் மறுத்ததை அடுத்து, பாஜக தலைமைக்கும் ஈஸ்வரப்பாவுக்கும் இடையே பிளவு தொடங்கியது. இதனையடுத்து, முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எதிர்த்துப் போட்டியிடப்போவதாக ஈஸ்வரப்பா அறிவித்திருந்தார்.
எடியூரப்பா தனக்கு துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டினார். எடியூரப்பாவின் மற்றொரு மகனான பி.ஒய்.விஜயேந்திரரை கர்நாடக பாஜக தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றுவதை வலியுறுத்தியும் குரல் கொடுத்தார். ஆனால் அமித் ஷா வரை எவரும் ஈஸ்வரப்பாவின் கிளர்ச்சிக் குரலை செவிமெடுக்கவில்லை. இதன் முடிவாக பாஜகவிலிருந்து ஈஸ்வரப்பா நீக்கப்பட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
மதுரை சித்திரைத் திருவிழா... மீனாட்சி தேரோட்டம் - அழகர் புறப்பாடு - சிறப்பு புகைப்படத் தொகுப்பு!
பகீர்... ஓடும் கார் கதவில் தொங்கியபடி சாகசம்! உயிரை பணயம் வைத்து இன்ஸ்டா வீடியோ!
காங்கிரஸ் செய்த பாவங்களுக்காக நாடு தண்டிக்கிறது... பிரதமர் மோடி சாபம்!