மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளரான தேபாசிஷ் தார் வேட்பு மனு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தேபாசிஷ் தார். இவர் சமீபத்தில் ஐபிஎஸ் பதவியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர். இந்நிலையில் இவர் வேட்புமனுவுடன், நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்பதற்கான சான்றிதழை இணைக்கவில்லை என கூறி, தேர்தல் அதிகாரி, தேபாசிஷ் தாரின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்தார்.
வேட்பாளர்கள் பொது நிதியை கொண்டிருக்கவில்லை அல்லது அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் எதுவும் நிலுவையில் இல்லை என்பதற்கான சுய உறுதிமொழியை பிரமாண பத்திரத்துடன் இணைக்க வேண்டும். இதுவே நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்பதற்கான சான்றிதழாக கருதப்படுகிறது.
இதனை சமர்ப்பிக்காததால் தேபாசிஷ் தார் வேட்பு மனு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தேபாசிஷ் தார் சார்பில் மூத்த வழக்கறிஞர் நிதேஷ் குப்தா ஆஜராகி, பிர்பூம் தொகுதியில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது என்றும், எனவே, இன்றைக்குள் இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், “அவசர வழக்காக விசாரிக்க மின்னஞ்சலைப் பார்க்கிறேன்" என்றார்.
பிர்பூம் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு 4ம் கட்டத் தேர்தல் நாளான வரும் மே 13ம் தேதி நடைபெறுகிறது.
தேபாஷிஷ் தாருக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பில் நிவாரணம் கிடைக்காவிட்டால், பிர்பூம் தொகுதியில் பாஜக சார்பில் மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ள தேப்தனு பட்டாச்சார்யா, அக்கட்சியின் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!
நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!
பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!
உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!
முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!