செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான பதில் மனுவை தாக்கல் செய்ய தாமதமானதற்கு, அமலாக்கத்துறை மன்னிப்பு கோரிய நிலையில், உச்சநீதிமன்றம் மனு மீதான விசாரணையை மே 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் பலருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டின் பேரில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்திருந்தது. சுமார் 10 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களை, கீழமை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுமீது பதில் மனு தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்ததோடு, அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனிடையே வழக்கின் விசாரணையை அமலாக்கத்துறை வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாக செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் தனிப்பட்ட கொடுக்கல், வாங்கல் விவகாரத்தை நிறுவன அமைப்பாக மாற்றி இந்த வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்திருப்பதாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு மன்னிப்பு கோரினார். இதையடுத்து இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற மே மாத 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் வாசிக்கலாமே...
ஓரம்போ... ஓரம்போ... மத்திய அமைச்சர் வண்டி வருது... டூவீலரில் வாக்குசேகரிக்கும் ஸ்மிருதி இரானி!
தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!
தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!
அடுத்த அதிர்ச்சி... ஈரோடு ஸ்டிராங் ரூமில் கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!
பயங்கரம்... கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!