சிறுபான்மை என்று கூறி மதரீதியில் நாட்டை பிளவுபடுத்த வேண்டாம் - எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

சிறுபான்மை என்று கூறி மக்களை மத அடிப்படையில் பிரித்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு பாஜக அரசு மிகப்பெரும் பங்காற்றி உள்ளது. குறிப்பாக அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களால் நாடு முழுவதும் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாகி உள்ளனர். விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் ரூ.2.80 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

கடந்த 10 ஆண்டுகளில் ஏழை பெண்களுக்கு 17 கோடி சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 3 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ளன. ஏழைகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. பாஜகவின் தாரக மந்திரம் வளர்ச்சியே ஆகும்.

எங்கள் சாதனைகளாலும் வளர்ச்சித் திட்டங்களாலும் வரும் மக்களவைத் தேர்தலிலும் மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்துவார்கள். பாஜக கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும். பாஜக மட்டும் 370 தொகுதிகளில் வெற்றிபெறும். எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. எதிர்க்கட்சிகளின் இந்த நிலைக்கு காங்கிரசே காரணம். மீண்டும் மீண்டும் ஒரே முகத்தை காங்கிரஸ் முன்னிறுத்துவதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் திறமையை காங்கிரஸ் வீணடிக்கிறது.

மோடி
மோடி

நாட்டையும் மக்களையும் மத அடிப்படையில் சிறுபான்மையினர் என்று கூறி பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றனர். உங்கள் பார்வையில் நாட்டில் மீனவர்கள் சிறுபான்மையினர் இல்லை, விவசாயிகள் சிறுபான்மையினர் இல்லை, கால்நடைகளை மேய்ப்பவர்கள் சிறுபான்மையினர் இல்லை, ஆனால், மத அடிப்படையில் மக்களை சிறுபான்மையினர் என்று இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் கூறுவீர்கள்? மத ரீதியாக மக்களை பிரித்து சிறுபான்மையினர் என்று கூறி நாட்டை பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்க வேண்டாம்.

பிற்படுத்தப்பட்டோருக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். என்னை குஜராத் முதல்வர் பதவியில் இருந்து அகற்ற காங்கிரஸ் முயற்சித்தது. அமலாக்கத்துறையை எதிர்ப்பவர்கள் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பிடிபடுவது ஏன்?” இவ்வாறு மோடி பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in