அடுத்த 6 ஆண்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி வருகிற ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சில இடங்களில் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஆனந்த் ஜோண்டேல் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ’பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொள்ளும் போது இந்து மற்றும் சீக்கிய கடவுள்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை குறிப்பிட்டு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். இதன் மூலம் அவர் வாக்காளர்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார். மேலும் எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் பேசி வருகிறார். எனவே அவர் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் 6 ஆண்டுகள் தடை விதிக்க உத்தரவிட வேண்டும்’ என தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த ரிட் மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தாந்த் குமார், ”இது போன்ற பல்வேறு கோரிக்கைகள் தேர்தல் ஆணையத்திற்கு தினம்தோறும் வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாகவும் ஒரு கோரிக்கை தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளது. சட்டபூர்வமாக அதன் மீது முடிவெடுக்கப்படும்” என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா, இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக கூறி உத்தரவிட்டார். அவரது தீர்ப்பில், ’இந்த ரிட் மனு முழுவதும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விதிமீறல் நடந்திருப்பதாக மனுதாரர் தனது கருத்தை முன்வைக்கிறார். ஒரு குறிப்பிட்ட பார்வையை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு இந்த நீதிமன்றம் அறிவுறுத்துவதை அனுமதிக்க முடியாது’ என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையும் வாசிக்கலாமே...
கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!
நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!
பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!
உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!
முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!