"அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்" என்று பாடகர் டி.எம்.கிருஷ்ணா விருது அறிவிப்பு விவகாரம் தொடர்பாக முதல் அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மியூசிக் அகாடமி வழங்கும் சங்கீத கலாநிதி விருது, இந்தாண்டு கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடக இசை பாடகிகள் ரஞ்சனி, காயத்ரி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பிராமணர்கள் இனப்படுகொலையை வெளிப்படையாக பெரியார் ஆதரித்தார். அப்படிப்பட்ட பெரியாரை போற்றும் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு விருது வழங்கக்கூடாது என்றும் கருத்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதை கண்டித்தும், பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆதரவாகவும், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக எம்பி கனிமொழி, பேச்சாளர் சல்மா, திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி மற்றும் பெரியார் ஆதரவாளர்கள், முற்போக்கு அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், பாடகர் டி.எம்.கிருஷ்ணா விருது விவகாரத்தில் அரசியலை கலக்க வேண்டாம் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ' பாடகர் கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது. இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும், முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதி வழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.
பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள். பாடகர் கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமியின் நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள். டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம். விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
ராமேஸ்வரத்தில் மீனவர்களின் காலவரையற்ற போராட்டம் தொடங்கியது!
சரோஜாதேவி கால்ஷீட்டுக்கு காத்திருந்த எம்.ஜி.ஆர்!
10வது வேட்பாளரையும் அறிவித்தது பாமக... காஞ்சிபுரத்தில் களமிறங்குகிறார் ஜோதி வெங்கடேசன்!
அதிமுக வேட்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட திடீர் உத்தரவு!