சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்ட விவகாரம், பொன்முடி சொல்படியே நடப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் பாஜக சேலம் மக்களவைத் தொகுதி அலுவலகத்தை மாநிலத் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தரை கைது செய்து ஒவ்வொரு தமிழனும் தலைகுனிந்து நிற்கும் அளவிற்கு செய்துள்ளனர். 2 பேர் துணை வேந்தர் ஜெகநாதனைச் சந்திக்க செல்கிறார்கள். 10 வினாடிகள் கூட இருக்காது. அதற்குள் எப்படி சாதிப்பெயரை குறிப்பிட்டு திட்டியிருக்க முடியும்?
மேலும் அவரிடம் பேசிவிட்டு செல்லும்போது இருவரும் சிரிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, சாதிப் பெயரை குறிப்பிட்டு திட்டியவர்கள் கேட்டுக்கொண்டு எவ்வாறு சிரிக்க முடியும்? முகாந்திரமே இல்லாமல் வன்கொடுமை வழக்கு போடப்பட்டுள்ளது. இது, அமைச்சர் பொன்முடி சொல்லிக் கொடுத்து நடக்கிறது.
பெரியார் பல்கலைக்கழகம் பதிவாளர் இல்லாமல் 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பொன்முடி துணைவேந்தரிடம், இவரைத்தான் பதிவாளராக போட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்.
அதை துணைவேந்தர் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசு சொன்ன பதிவாளரை போடவில்லை என்ற காரணத்தால் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரியார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பாஜக சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஆத்தூரில் 2 விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து அமலாக்கத் துறை தான் விளக்கம் அளிக்க வேண்டும். இதற்கு முன்பாக இரண்டு விவசாயிகள் மீது வனத்துறை சட்டத்தில் காட்டெருமையைக் கொலை செய்த வழக்கு உள்ளது. மேலும் உங்களது வங்கிக் கணக்கை கொடுங்கள். சோதனை செய்ய வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள்.
ஆதார் அட்டையையும், வங்கிக்கணக்கையும் கொடுக்கப் போகிறார்கள். அதை அமலாக்கத்துறை சோதனை செய்ய போகிறது. அதற்கு மேல் குற்றம் செய்யாத நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தால் நானே களத்திற்கு வந்து முதல் ஆளாக அவரது விவசாய நிலத்தில் தர்ணா போராட்டத்தில் அமர்வேன்.
தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்யும் பதிவேட்டில் சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும். வடமாநிலத்தில் எங்கு பார்த்தாலும் சாதிப் பெயரைக் குறிப்பிட்டுதான் அறிக்கை குறிப்பிடுவார்கள். அதன் அடிப்படையிலேயேதான் கொடுத்திருப்பார்களே தவிர, வேறு எந்த காரணமும் இருக்காது. இதனை அமலாக்கத்துறை வருங்காலங்களில் திருத்திக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் வழக்குப் பதிவில் சாதிப் பெயரை ஏன் கொண்டு வருகிறீர்கள்? தமிழக அரசுக்கு சாதி வேண்டுமா? சென்னையில் நிவாரணத் தொகை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் கையில் பணத்தை கொடுப்பதே முறைகேடு செய்வதற்காகத்தான். அதனால் தான் ஆன்லைன் மூலம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம்.
பொங்கல் தொகுப்பு என்று கொண்டு வருவார்கள்.பொங்கல் தொகுப்பிற்கு நாடகம் நடத்தி பொதுமக்களிடம் பணத்தை கொடுப்பார்கள். ஒரு பட்டனை அழுத்தினால் உடனடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். ஆனால், இவர்கள் வங்கிக் கணக்கில் தரமாட்டார்கள் என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
ரொக்கம் கிடையாது... அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!
பெரும் துயரம்... பிரசவத்தின்போது தாய், பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
சோகம்... தியாகராஜ பாகவதரின் மகள் காலமானார்!
லோகேஷ் கனகராஜூக்கு உளவியல் பரிசோதனை... உயர் நீதிமன்றத்தில் அதிரடி வழக்கு!
மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு செய்தவர்களுக்கு குட்நியூஸ்!