உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மணல் குவாரி முறைகேடு தொடர்பான விசாரணைக்காக சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜராகியுள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில் மணல் எடுப்பதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து கடந்த செப்டம்பர் மாதம் 34 இடங்களில் சோதனை நடத்தியது. தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் மற்றும் அவர்களது ஆடிட்டர் சண்முகராஜ் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பணம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
மணல் குவாரிகளில் தொழில்நுட்ப ரீதியாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் மதிப்பிலான மணல் முறகேடாக தோண்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால், தமிழ்நாடு அரசின் ஆவணங்களின்படி 36.45 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. இது தொடர்பாக ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த சம்மனுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமலாக்க துறையின் விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, தஞ்சை, திருச்சி, வேலூர், அரியலூர், கரூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் இன்று சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உள்ளனர்.
வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா, கரூர் ஆட்சியர் தங்கவேல், தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் ஆகிய ஐந்து பேர் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.
இந்த விசாரணையின் போது மணல் குவாரிகள் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்ப அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் வசமுள்ள பல்வேறு ஆவணங்கள் குறித்தும் ஆட்சியர்களிடம் கேள்வி எழுப்பப்படும் என தெரிகிறது.
இதையும் வாசிக்கலாமே...
டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!
துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?
சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?
திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!