சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அதிகாரிகள் இடையிலான பிரச்சினை காரணமாக மாணவர்களின் கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதிகளை சேர்க்காததை எதிர்த்து வழக்கறிஞர் ஜெகந்நாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, "ஏற்கனவே பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவை நியமித்து ஆளுனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சென்னை பல்கலைக்கழகத்தை இணைக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என பல்கலைக்கழகத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, "துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தற்காலிக குழுவை அமைத்துள்ளது. மாணவர்களின் நலன் பாதிக்கப்படக் கூடாது" என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "கடந்த ஓராண்டாக சென்னை பல்கலைகழகம் துணைவேந்தர் இல்லாமல் செயல்படுகிறது. இது மோசமான நிலை. துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பாக அதிகார அமைப்புக்களுக்கு இடையிலான பிரச்சினை காரணமாக மாணவர்களின் கல்வி தான் பாதிக்கப்படுகிறது. கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது" என்று வேதனை தெரிவித்தனர்.
மேலும், "மாணவர்களின் கல்வி குறித்து தான் நீதிமன்றம் கவலை கொள்கிறதே தவிர, அதிகார அமைப்புக்களுக்கு இடையிலான பிரச்சினை பற்றி அல்ல. பல்கலைக்கழகங்களை நிர்வாகிக்கும் அதிகார அமைப்புக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்" எனக் கூறி, வழக்கை இறுதி விசாரணைக்காக ஜூன் 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!
இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!
கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!
கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!