மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அயல்நாட்டு சக்திகள் பணியாற்றியதாக தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் இன்று முன்னாள் ஆளுநரும், பாஜக தென்சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தமிழிசை செளந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அயல்நாட்டு சக்திகள் பணியாற்றின. விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும் என்ற பிரேமலதாவின் கருத்தில் உடன்படுகிறேன். என்னுடைய ஆளுநர் பதவி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். தென்சென்னை மக்கள் ஒரு நல்ல வேட்பாளரை தேர்வு செய்யவில்லை என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.” என்றார்.
மேலும், “ தென்சென்னையில் அரசியல் சார்பற்று சேவை செய்ய வேண்டும் என்று எண்ணுகிற இளைஞர்கள் என்னோடு இணையலாம். தென்சென்னையில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டாலும், செய்யப்படவில்லை என்றாலும் நாங்கள்தான் மக்களவை உறுப்பினர். அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருந்தால் நிறைய இடங்கள் வென்றிருக்கலாம் என அதிமுக தலைவர்கள் இப்போது சொல்கின்றனர். நாங்களும் அதையேதான் சொல்கிறோம். 2026ல் என்ன கூட்டணி என்பதை இப்போது என்னால் கூற முடியாது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ அதிமுக குறித்து நான் பேசியது என்னுடைய கருத்து. அண்ணாமலையின் கருத்தை அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள், கட்சிக்குள் எங்களுக்குள் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. தமிழகத்தில் இருந்து பாஜகவில் ஒருவர் கூட வெற்றிபெற முடியவில்லை. இதனால் மத்திய அமைச்சரவையில் பதவி கிடைக்குமா என தெரியாது.” என்று அவர் கூறினார்
இதையும் வாசிக்கலாமே...
விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா? - சத்யபிரதா சாஹு பதில்!
மயக்க ஊசி போட்டதால் உயிரிழந்த 7 வயது சிறுவன்... அறுவை சிகிச்சையில் விபரீதம்!
பிறந்த நாள் விழாவில் பயங்கர மோதல்... கல்லூரி மாணவர் குத்திக்கொலை!