மரபணு ரீதியிலான புற்றுநோய் ஆபத்தில் அதிகம் இருப்பது ஏழைகளா அல்லது பணக்காரர்களா என்ற கேள்விக்கு, அண்மையில் வெளியாகி இருக்கும் மருத்து ஆய்வு ஒன்று பதில் தந்துள்ளது.
பணக்காரர்களைவிட ஏழைகள் மற்றும் சொற்ப வருமானம் கொண்டவர்களே அதீத நோய்களுக்கு ஆளாவதாக பொதுவெளியில் நம்பிக்கைகள் நிலவுகின்றன. பணக்காரர்களுக்கு கிடைக்கும் உணவூட்டம், மருத்துவ பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் இதர வசதிகள் அவர்களை நோய்களில் இருந்து பாதுகாப்பதாகவும் நம்பப்படுகிறது. பொதுவான இந்த நம்பிக்கைகள் சாதாரண நோய்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்; ஆனால் மரபுரீதியிலான புற்றுநோய் பாதிப்புகளை பொறுத்தளவில், ஏழைகளைவிட பணக்காரர்களே அதிகம் இரையாகின்றனர்.
பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, சமூக-பொருளாதார நிலை மற்றும் பல்வேறு நோய்களுக்கு இடையிலான தொடர்பை ஆய்வு செய்தது. ஏழைகளை விட பணக்காரர்களுக்கு மரபணு ரீதியாக புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என அந்த ஆய்வில் தெரியவந்தது. பணக்காரர்களுக்கு மார்பகம், புரோஸ்டேட் மற்றும் பிற வகை புற்றுநோய்க்கான மரபணு ஆபத்து அதிகமாக உள்ளதும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்காக, 35 முதல் 80 வயதுடைய 2,80,000 பின்லாந்து குடிமக்களுக்கான சுகாதாரத் தரவுகள், அவர்களின் சமூக-பொருளாதார நிலை மற்றும் மரபணு ஆகியவற்றை ஆராய்ச்சி குழு சேகரித்தது.
பெரும்பாலான மருத்துவ ஆபத்து முன்கணிப்பு மாதிரிகள், பாலினம், வயது போன்ற அடிப்படை மக்கள்தொகை தகவல்களை உள்ளடக்கியது. ’மரபணுத் தகவல்களை சுகாதாரப் பாதுகாப்பில் இணைக்கும்போது இத்தகைய சூழல் முக்கியமானது என்பதை ஒப்புக்கொள்வது ஒரு முக்கியமான முதல் படியாகும். ஆனால் இப்போது, நோய் அபாயத்தின் மரபணு முன்கணிப்பு ஒரு தனிநபரின் சமூக-பொருளாதார பின்னணியைப் பொறுத்தது என்பதை நாம் காட்ட முடியும்’ என்று ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
’எனவே நமது வாழ்நாள் முழுவதும் நமது மரபணு தகவல்கள் மாறாது என்றாலும், நாம் வயதாகும்போது அல்லது நமது சூழ்நிலைகளை மாற்றும்போது நோய் அபாயத்தில் மரபணுவின் தாக்கம் மாறுகிறது’ என்றும் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக குறிப்பிட்ட தொழில்கள் மற்றும் நோய் ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் புரிந்துகொள்வதற்கான ஒரு ஆய்வை ஆராய்ச்சியாளர்கள் அடுத்த கட்டமாக தொடங்கி உள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!
5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!
மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!