ராகுல் காந்தி
ராகுல் காந்தி

வயநாடு, ரேபரேலியில் ராகுல் காந்தி வெற்றி: ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் வென்றால் என்ன நடக்கும்?

காங்கிரஸ் எம்பி- ராகுல் காந்தி வயநாடு, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான 14 நாள்களுக்குள் இவற்றுள் ஏதாவது ஒரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடப்பு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி, கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு எம்பி- அடுத்து என்ன மாதிரியான முடிவுகளை எடுக்க நேரிடும் என்பது குறித்து இங்கே அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் இரண்டு மக்களவைத் தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுவது சட்டப்பூர்வமானது. இரண்டிலும் ஒருவரே வெற்றி பெற்றால் காலியான தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

ரேபரேலி, வயநாடு தொகுதிகள்
ரேபரேலி, வயநாடு தொகுதிகள்

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் படி முடிவுகள் வெளியான 14 நாட்களுக்குள் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர் அதில் ஏதாவது ஒரு இடத்தை ராஜினாமா செய்தாக வேண்டும்.

ராகுல் காந்தியைத் தவிர, ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், காந்தபானி மற்றும் ஹிஞ்சிலி ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒரே நேரத்தில் போட்டியிட்டார். அவர் காந்தபாஞ்சியில் தோல்வியைத் தழுவினார். ஆனால், ஹிஞ்சிலி தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்தியத் தேர்தல்களில், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது ஒரு வழக்கமான நிகழ்வாகும். கடந்த காலத்தில் 1996 மக்களவைத் தேர்தலின் போது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், குஜராத்தின் காந்திநகர், உத்தரப் பிரதேசத்தின் லக்னோ தொகுதிகளில் போட்டியிட்டார்.

அவர் இரண்டு இடங்களையும் வென்றதால் லக்னோவை தக்க வைத்துக் கொண்டார். இதனால் காந்தி நகரில் இடைத்தேர்தல் நடத்த வேண்டியிருந்தது.

வாஜ்பாய், சோனியா காந்தி (கோப்பு படம்)
வாஜ்பாய், சோனியா காந்தி (கோப்பு படம்)

இதேபோல், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் பெல்லாரி மற்றும் உத்தரபிரதேச மாநிலம் அமேதி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014 பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி, குஜராத்தின் வதோதரா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றாலும், வாரணசியை தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்தார்.

ராகுல் காந்தி கடந்த 2019 தேர்தலிலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அமேதியில் தோல்வியைத் தழுவிய அவர், வயநாட்டில் வெற்றி பெற்றார்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 33(7) ஐ எதிர்த்து, கடந்த 2023ல் வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ஒரே நேரத்தில் 2 தொகுதிகளில் போட்டியிடும் இந்த விதியை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என வாதிட்டார்.

ஒரே நேரத்தில் ஒரே பதவிக்கு பல தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை நிறுத்த தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஒரே நாளில் தங்கம் விலை ஒரே சவரனுக்கு ரூ.600 உயர்வு... மக்கள் அதிர்ச்சி!

டிரக்கிங் சென்ற கர்நாடகாவை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!

கடனைத் திருப்பிக் கேட்ட பெண் கொன்று புதைப்பு... 20,000 ரூபாய்க்காக கொடூரம்!

மத்திய அமைச்சர் ஆகிறாரா எச்.டி. குமாரசாமி? குறி வைக்கும் முக்கிய இலாகா!

வைகாசி மாத அமாவாசை... ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

x
காமதேனு
kamadenu.hindutamil.in