பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்காக, இந்திய பிரம்மோஸ் ஏவுகணைகளின் ரகசியங்களை களவாடிய இளம் விஞ்ஞானி ஒருவருக்கு, நாக்பூர் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஃபேஸ்புக் போலிகணக்குகள் வாயிலாக இரு பெண்கள் பெயரில் இயங்கிவர்கள் வலையில் விழுந்த நிஷாந்த் அகர்வால், அவர்களுக்காக இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகள் குறித்தான ரகசிய தகவல்களை களவாடி பகிர்ந்தார். இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு உலை வைக்கும் ரகசியங்கள், பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ அமைப்புக்கு சென்று சேரக் காரணமானர். இது தொடர்பான வழக்கில் இன்று ஆயுள் தண்டனைக்கு அவர் ஆளாகி உள்ளார்.
இந்தியாவின் சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ், நிலம், வான், கடலின் மேற்பரப்பு மற்றும் நீருக்கடியில் இருந்து ஏவக்கூடிய வல்லமை கொண்டது. இந்த பிரம்மோஸ் வடிவமைப்பு பொறியாளர்களில் ஒருவராக பணியாற்றியவர் நிஷாந்த் அகர்வால். இவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு பிரம்மோஸ் ஏவுகணை குறித்த தகவல்களை கசியவிட்டதாக 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். டிஆர்டிஓ மற்றும் ரஷ்யாவின் ராணுவ தொழில்துறை கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸில் மூத்த கணினி பொறியாளர் பொறுப்பில் நிஷாந்த் அகர்வால் பணிபுரிந்தார்.
பிரம்மோஸ் ஏரோஸ்பேஸைத் தாக்கிய முதல் உளவு ஊழலாக நிஷாந்த் அகர்வால் விவகாரம் எழுந்தது. நேகா சர்மா, பூஜா ரஞ்சன் என இரு பெண்கள் பெயரிலான ஃபேஸ்புக் கணக்குகள் மூலம், நிஷாந்த் அகர்வால் மறைமுகமாக பாகிஸ்தானிய உளவுத்துறையினருடன் தொடர்பில் இருந்தார். இஸ்லாமாபாத்தை மையமாகக் கொண்ட இந்தக் கணக்குகள் பாகிஸ்தானின் உளவுத்துறையினரால் பராமரிக்கப்பட்டது பின்னர் தெரிய வந்தது.
நிஷாந்த் அகர்வால் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இளம் விஞ்ஞானிகள் விருதை வென்றவர், ஆனால் இரு பெண்கள் வீசிய ஹனிடிராப் வலையில் சிக்கி, சக ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். பணியில் சூரரான நிஷாந்த் அகர்வால், இளம் வயதிலேயே தன்னுடைய திறமைக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றவர்.
சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்ததும், ஃபேஸ்புக் தோழிகளாக அறிமுகமான இரு பெண்களிடம் வழிந்ததும் நிஷாந்த் அகர்வாலை பெரும் இக்கட்டில் மாட்டி விட்டிருக்கிறது. அவருக்கு எதிரான வழக்கு விசாரணையின் முடிவில், கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எம்.வி.தேஷ்பாண்டே, தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நிஷாந்த் அகர்வால் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். இதன் மூலம் நிஷாந்த் அகர்வாலுக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ 3,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!
5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!
மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!