ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் சங்க பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சம்மனை தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், எம்.பி-யுமான பரூக் அப்துல்லா, கேஜ்ரிவால் பாணியில் தவிர்த்து வருகிறார்.
ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அசோசியேஷன் (ஜேகேசிஏ) பண மோசடி தொடர்பான வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால், இன்று பரூக் அப்துல்லா அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் தற்போது ஜம்முவில் இருப்பதால், இன்று விசாரணைக்கு ஆஜராகமாட்டார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், அவர் ஸ்ரீநகரில் இருக்கும்போது, அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு சென்று விசாரணையை எதிர்கொள்வார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வழக்கில் கடந்த ஜனவரி 11ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அனுப்பியிருந்த சம்மனையும் பரூக் அப்துல்லா தவிர்த்திருந்தார்.
ஏற்கெனவே அமலாக்கத் துறை சம்மன்களை ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் தொடர்ச்சியாக தவிர்த்து வருகிறார். இதேபோல், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனும் ஆரம்பத்தில் அமலாக்கத் துறை சம்மன்களை தவிர்த்து வந்தார். பின்னர், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்ததைத் தொடர்ந்து அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், 86 வயதான பரூக் அப்துல்லாவும், கேஜ்ரிவால் பாணியில் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு அமலாக்கத் துறை சம்மன்களை தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!
வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!
பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!