மேற்கு வங்கத்தில் 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதைத் தொடர்ந்து, நீதிமன்றம், தீர்ப்புகளில் பாஜக தலைவர்களின் ஆதிக்கம் உள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட 25753 ஆசிரியர்கள் மற்றும் 'சி’, 'டி' பிரிவு ஊழியர்கள் நியமனம் முறைகேடானது என கூறி கொல்கத்தா உயர்நீதிமன்றம் அந்த பணி நியமன நடவடிக்கையை ரத்து செய்துள்ளது. மேலும், பணியில் சேர்க்கப்பட்ட ஆசிரியர்கள் 12 சதவீத வட்டியுடன் தாங்கள் பெற்ற சம்பளத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரமானது அம்மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கும், பாஜகவுக்கும் இடையே அரசியல் மோதலை தூண்டியுள்ளது. ஆசிரியர்கள் பணி நீக்க விவகாரம் குறித்து மேற்கு வங்க பாஜக வெளியிட்டுள்ள தகவலில், "கடந்த 2016ல் இருந்து சுமார் 24 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சிபிஐ யாரையும் காவலில் எடுக்கலாம். தற்போது தகுதியான ஆசிரியர்களின் முகத்தில் புன்னகை தோன்றியுள்ளது.
எனவே, மருமகனும் (அபிஷேக் பானர்ஜி) அவரது அத்தையும் (மம்தா பானர்ஜி) பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்சில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி இந்த பிரச்சினை தொடர்பாக பேசுகையில், “பாஜக தலைவர்கள் நீதித்துறை மற்றும் தீர்ப்புகளில் செல்வாக்கு செலுத்துகின்றனர்.
அனைத்து ஆட்சேர்ப்புகளையும் ரத்து செய்த நீதிமன்ற தீர்ப்பு சட்டவிரோதமானது. வேலை இழந்தவர்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம். உங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வோம். இந்த உத்தரவை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யும்.” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
மதுரை சித்திரைத் திருவிழா... மீனாட்சி தேரோட்டம் - அழகர் புறப்பாடு - சிறப்பு புகைப்படத் தொகுப்பு!
பகீர்... ஓடும் கார் கதவில் தொங்கியபடி சாகசம்! உயிரை பணயம் வைத்து இன்ஸ்டா வீடியோ!
காங்கிரஸ் செய்த பாவங்களுக்காக நாடு தண்டிக்கிறது... பிரதமர் மோடி சாபம்!