இமாச்சலில் விபத்து; மாயமான சைதை துரைசாமியின் மகனை 24 மணி நேரமாக தேடும் பேரிடர் மீட்புப்படை... பரபரப்பு தகவல்கள்!

மகன் வெற்றியுடன் சைதை துரைசாமி.
மகன் வெற்றியுடன் சைதை துரைசாமி.
Updated on
2 min read

இமாச்சலப் பிரதேச சட்லெஜ் நதியில் கார் உருண்டு விழுந்து விபத்தில் மாயமான முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனை 24 மணி நேரமாக தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். நாளை காலை மீண்டும் தேடுதல் பணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகர் பகுதியில் வசித்து வருபவர் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவருக்கு வெற்றி துரைசாமி என்ற மகன் உள்ளார். வெற்றி துரைசாமிக்கு திருமணம் முடிந்து இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சினிமா தயாரிப்பாளரான வெற்றி, நடிகர் விதார்த் நடித்த "என்றாவது ஒருநாள்" திரைப்படம் உட்பட இரண்டு படங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில் திரில்லர் படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டிருந்த வெற்றி துரைசாமி, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அப்படத்திற்கு லொகேஷன் பார்ப்பதற்காக தனது நண்பர்களுடன் இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

வெற்றி துரைசாமி
வெற்றி துரைசாமி

இந்நிலையில் நேற்று மதியம் வாடகை கார் ஒன்றை எடுத்துக் கொண்டு வெற்றி துரைசாமி மற்றும் அவரது உதவியாளர் கோபிநாத் ஆகிய இருவரும் இமாச்சலப் பிரதேசம் கஷாங் நாலா மலைப்பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அங்கு மலை மீது சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள பள்ளத்தில் உருண்டு சட்லஜ் நதியில் விழுந்து மூழ்கியதாக கூறப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் அளித்த தகவலின் பெயரில் இமாச்சலப் பிரதேச போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து கார் ஓட்டுநர் தஞ்சின் உடலை சடலமாக மீட்ட நிலையில் வெற்றி துரைசாமியின் உதவியாளரான திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயில் பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவரை படு காயங்களுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் கோபி மேல் சிகிச்சைக்காக சிம்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் விபத்தில் மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணியில் 50 க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர் . 24 மணி நேரமாக படகு மூலமாக தேடி வந்த நிலையில் இதுவரை மாயமான வெற்றியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தகவலை இமாச்சலப் பிரதேச போலீஸார் தமிழக போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில், சைதை துரைசாமி தனது நண்பர்களுடன் இமாச்சலப் பிரதேசத்திற்கு விரைந்துள்ளார்.

வெற்றி துரைசாமி
வெற்றி துரைசாமி

மேலும் இந்த விபத்து தொடர்பாக இமாச்சலப் பிரதேச போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார் ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேடி வரும் நிலையில், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் தேடும் பணி தற்போது நிறுத்தப்பட்டு மீண்டும் நாளை காலையில் தொடரும் என கின்னனூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வெற்றி துரைசாமி மாயமான தகவல் அறிந்து சைதை துரைசாமியின் ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கூடியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in