சமயபுரம் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அம்மன் திருத்தலங்களில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். தமிழகத்தில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு அடுத்ததாக அதிக அளவில் பக்தர்கள் வருகை மற்றும் அதிக உண்டியல் காணிக்கையில் சமயபுரம் கோயில் 2-ம் இடத்தில் உள்ளது. இக்கோயிலின் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவில் வெவ்வேறு வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஏப்ரல் 16) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10.31 மணிக்குள் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதைத்தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேரோட்டத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 8-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!
நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!
மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!