ரூ.22 லட்சம் மதிப்புள்ள உயர்ரக போதைப்பொருள் பறிமுதல்! வடமாநில தம்பதி கைது

போதை பொருள் விற்ற தம்பதி கைது
போதை பொருள் விற்ற தம்பதி கைது

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போதை பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தொண்டாமுத்தூர் காவல் ஆய்வாளர் அப்பாதுரை தலைமையிலான தனிப்படை போலீஸார், தொண்டாமுத்தூர், நரசிபுரம் சாலை, குளத்துப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த வடமாநில நபரான பெரிதுல் இஸ்லாம், என்பவரை அழைத்து விசாரணை நடத்தி சோதனை செய்தனர். அவரிடம் 12 கிராம் எடையுள்ள ஐந்து பாக்கெட்டுகளில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 60 கிராம் எடையுள்ள உயர்ரக போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், தற்போது தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தில் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் கடந்த 3 மாதங்களாக வசித்துக் கொண்டு, கட்டிட கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இவர் மூலம் கிடைத்த தகவலை அடுத்து, தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த குதர்ஷா கத்துல் (35) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அதில் அவரது வீட்டில் இருந்து 12 கிராம் எடையுள்ள இரண்டு பாக்கெட்டுகளில், சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 25 கிராம் எடையுள்ள உயர்ரக போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த உயர்ரக போதைப் பொருளை அசாம் மாநிலத்தில் இருந்து ரயிலில் கொண்டு வந்து, அந்த சுற்றுவட்டாரத்தில் வேலை செய்யும் வடமாநிலத்தவர்களுக்கு அதிக லாபத்தில் விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து குற்றவாளிகள் இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள 85 கிராம் எடையுள்ள உயர்ரக போதைப்பொருள் செய்யப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in