அமெரிக்க முன்னாள் அதிபருக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தின் வெளியே, மர்ம நபர் ஒருவர் தீக்குளித்தது அங்கே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், டொனால்ட் டிரம்பின் ஹஸ்-பண வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நீதிமன்றத்துக்கு சற்று வெளியே, மர்ம நபர் ஒருவர் துண்டுப் பிரசுரங்களை வீசி எறிந்த கையோடு தீக்குளித்தார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான குற்றவியல் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றம் இதனால் தனது வழக்கு விசாரணைகளை சற்று நேரம் நேற்று ஒத்தி வைக்க வேண்டியதாயிற்று.
நியூயார்க் போலீஸார் விசாரணையில் தீக்குளித்த நபரின் பெயர் மேக்ஸ்வெல் அஸ்ஸரெல்லோ என்றும், ஃபுளோரிடாவின் செயிண்ட் அகஸ்டினைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
தீக்குளித்ததில் பலத்த காயங்களுடன் கார்னெல் பல்க்லைக்கழக மருத்துவமனையின் தீக்காயப் பிரிவில் ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தீக்குளிப்புக்கு முன்னதாக அவர் வீசியெறிந்த பிரசுரங்கள் மூலமாக அவர் டிரம்ப் ஆதரவாளர் குழுவை சேர்ந்தவராக இருக்கும் என போலீஸார் அனுமானிக்கின்றனர்.
ஃபுளோரிடாவிலிருந்து அவர் நியூயார்க் வந்தது தொடர்பாக அவரது வீட்டார் அறிந்திருக்கவில்லை. டிரம்ப் குற்றவியல் வழக்கு விசாரணை நடைபெரும் நீதிமன்றத்தின் முன்பாக சற்று நேரம் உலாத்தியவர், எவருக்கும் ஆபத்து விளைவிக்காத பகுதிக்கு தனித்து சென்றதும், உடன் எடுத்துச் சென்ற எரிபொருள் திரவத்தை தன்மீது வார்த்த பிறகு தீ வைத்துக்கொண்டார்.
தீக்குளிப்புக்கு முன்னதாக பதற்றமின்றி அமைதியாக அவர் இருந்ததாகவும் அங்கிருந்தோர் தெரிவிக்கின்றனர். நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு நெறிமுறைகளை அந்த நபர் மீற முயற்சிக்கவில்லை என்றும் போலீஸார் தெரிவிக்கின்றனர். 37 வயதாகும் அந்த நபர், அமெரிக்காவின் வீடற்றவர்களில் ஒருவர் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அந்த இளைஞரின் பின்புலம், அவருடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவரின் திட்டவட்டமான நோக்கம் உள்ளிட்டவை குறித்து நியூயார்க் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
வாக்காளர்களுக்கு இடையூறு... நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்!
நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்... ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!
உஷார்... வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!
பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லையில் நுழைய முயன்ற ட்ரோன்; பிஎஸ்எஃப் அதிரடி நடவடிக்கை!