சென்னையில் சாலையோரம் தூங்குவதில் ஏற்பட்ட இடத்தகராறில் ஆட்டோ ஓட்டுநரை கல்லால் அடித்து கொலை செய்த சென்டிரிங் தொழிலாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை மாதவரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் வேலவேந்தன் என்கிற வேலவன் (36). திருமணமாகாத இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பெற்றோருடன் அவருக்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வேலவேந்தன் மாதவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலை ஓரத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு அங்கேயே தூங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இன்று அதிகாலை 4:30 மணியளவில் ஆட்டோ ஓட்டுநர் வேலவேந்தன் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மாதவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வேலவேந்தனின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளில் பதிவான அடையாளத்தை வைத்து, மாதவரம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளியான சிவசங்கர் (46) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
கூலித் தொழிலாளி சிவசங்கரும் தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டிற்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். அவரும் மாதவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையோரம் தங்கி வந்துள்ளார். ஒரே இடத்தில் தங்குவது தொடர்பாக கொலையான ஆட்டோ ஓட்டுநர் வேலவேந்தனுக்கும், சிவசங்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், வேலவேந்தன் சிவசங்கரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இருவரையும் சமாதானம் செய்து பிரித்து அனுப்பியுள்ளனர்.
அங்கிருந்து நேராக மதுக்கடைக்கு சென்ற சிவசங்கர், மது அருந்தி உள்ளார். மது போதையில் டாஸ்மாக் கடையின் அருகே படுத்து உறங்கிய அவர், அதிகாலை 4 மணியளவில் மாதவரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் வேலவேந்தனை கண்டதும் கடும் ஆத்திரமடைந்தார். அருகில் இருந்த கல்லை எடுத்து வேலவேந்தனை அவர் கடுமையாக தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சிவசங்கர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அதன்பின்னர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி அவரை பிடித்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சிவசங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!
முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!
‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்
காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?