ஏன் இவ்வளவு காலதாமதம்... வேங்கைவயல் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கேள்வி!

வேங்கைவயல்  மேல்நிலை குடிநீர் தொட்டி
வேங்கைவயல் மேல்நிலை குடிநீர் தொட்டி

வேங்கை வயல் கிராம  குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட  விவகாரம் தொடர்பான வழக்கில் மூன்று மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும் என காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சிக்கு  உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையானது. இது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஒரு நபர் ஆணையமும் விசாரணைகளை முடித்து இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் மாநில அரசு தீவிரம் காட்டாததால், கிராம மக்கள், மக்களவைத தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, “2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 மாதங்களாகி விட்டன. புலன் விசாரணையில் ஏன் இவ்வளவு தாமதம்? எப்போது விசாரணை முடிக்கப்படும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு காவல் துறை தரப்பில், ”உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது குரல் மாதிரி சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை, 337 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணை முடிக்கப்படும்” என உறுதியளிக்கப்பட்டது. 

இதை பதிவுசெய்த நீதிபதிகள், வழக்கின் புலன் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். ”அன்றைய தினத்தில் விசாரணை முடிக்கப்பட்டிருக்கும்” என தாங்கள் எதிர்பார்ப் பதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...  

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in