தேவ கவுடா பேரன் ஆபாச வீடியோ விவகாரத்தில் மோடி மவுனம் காப்பது ஏன்? -ரகசிய கடிதத்தை வெளியிட்டு காங்கிரஸ் கேள்வி

மோடி, தேவ கவுடா உள்ளிட்டோருடன் பிரஜ்வல் ரேவண்ணா
மோடி, தேவ கவுடா உள்ளிட்டோருடன் பிரஜ்வல் ரேவண்ணா

தேவ கவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாசங்கள் அடங்கிய பென் டிரைவ் குறித்து பாஜக முன்கூட்டியே அறிந்திருந்தபோதும், தேவ கவுடா கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்தது ஏன், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தது ஏன்... என்பது உள்ளிட்ட கேள்விகளை காங்கிரஸ் எழுப்பி வருகிறது.

முன்னாள் பிரதமர் தேவ கவுடா பேரனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான விவகாரம் தேர்தல் நெருக்கத்தில் வெகுவாக வெடித்து வருகிறது. பாஜக மற்றும் பிரதமர் மோடியை சங்கடத்தில் ஆழ்த்தும் கேள்விகளையும் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் எழுப்பத் தொடங்கி உள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச பென் டிரைவ் தொடர்பாக பாஜகவின் தேவராஜ் கவுடா மா நிலதலைமைக்கு எழுதிய கடிதம் ஒன்றையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டு பாஜக - ஜேடிஎஸ் கட்சிகளை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. மேற்படி ரகசிய கடிதத்தை எக்ஸ் தளத்தில் வெளிட்டிருக்கும் காங்கிர தலைவர்களில் ஒருவரான பவன் கேரா, பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

”டிசம்பர் 8, 2023 அன்று பாஜக தலைவர் தேவராஜ் கவுடா பாஜக கர் நாடகா மாநிலத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் பிரஜ்வால் ரேவன்னாவின் பென் டிரைவ் முழுக்க முழுக்க ஆபாச வீடியோக்கள் இருப்பதை அம்பலப்படுத்துகிறது. அதன் பிறகும் பாஜக ஏன் இன்னும் கூட்டணியில் தொடர்கிறது. தொடர் கற்பழிப்பு வீடியோ பதிவு செய்யப்பட்டு பென் டிரைவில் வைக்கப்பட்டுள்ளதற்கு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உலகின் மிகப்பெரும் பாலியல் முறைகேட்டின் மன்னன் பிரஜ்வால் என்று தெரிந்திருந்தும் பிரதமர் மோடி ஏன் பிரஜ்வால் ரேவண்ணாவுக்காக ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தார்? விவகாரம் அம்பலமானதும் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிக்க உதவி செய்தது யார்? இவை அனைத்திலும் இன்னும் பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்?” என்று பவன் கேரா கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பவன் கேரா பகிர்ந்திருக்கும் அந்த கடிதத்தை தேவராஜ் கவுடா கன்னடத்தில் எழுதி உள்ளார். ’2976 வீடியோக்கள் ஏற்கனவே காங்கிரஸ் தலைவர்களிடம் இருப்பதாகவும், அவை மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு ஆயுதமாக மாறக்கூடும். எனவே ரேவண்ணாவை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் போட்டியிட அனுமதித்தால், அது மாநிலத்தில் பாஜகவின் இமேஜை எதிர்மறையாக பாதிக்கும்’ என்றும் அந்தக் கடிதத்தில் தேவராஜ் கவுடா குறிப்பிட்டுள்ளார்.

தேவராஜ் கவுடாவின் கடிதத்தை இன்று பொதுவெளியில் பதிந்திருக்கும் பவன் கேரா, நாட்டின் பிற இடங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் குறித்து குரல் எழுப்பும் பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் அமைதி காப்பது ஏன் என்றும் கேட்டுள்ளார். குறிப்பாக சந்தேஷ்காலியில் ஷேக் ஷாஜகானை முன்வைத்து திரிணமூல் கட்சியின் இமேஜை காலி செய்து வரும் பாஜக, பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தை மூடி மறைத்தது ஏன் என்றும் பவன் கேரா இன்று கேட்டுள்ளார்.

இது தொடர்பாக பவன் கேராவின் இன்னொரு பதிவில் ”மோடி இன்று முழுவதும் கர்நாடகாவில் இருப்பார். அவரது கூட்டணி கட்சி எம்பியின் ஆபாச முறைகேடு குறித்து ஒரு வார்த்தை கூட பேச மோடிக்கு தைரியம் வராது என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும்! பிரஜ்வால் ரேவண்ணா ’மோடியின் பரிவார குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் பிரதமர் அமைதியாக இருக்கிறாரா? பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக இருக்க உதவியது யார்? பிரஜ்வல் ரேவண்ணா குறித்து உங்கள் சொந்த கட்சியின் தேவராஜ் கவுடா கடந்த வருடமே விடுத்த எச்சரிக்கைகளை நீங்கள் வேண்டுமென்றே புறக்கணித்தீர்களா?” என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். விசாரணை முடிவுகள் வெளிவரும் வரை பிரஜ்வல் ரேவண்ணாவிடமிருந்து விலகியிருப்பதாக ஜேடிஎஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


ஓரம்போ... ஓரம்போ... மத்திய அமைச்சர் வண்டி வருது... டூவீலரில் வாக்குசேகரிக்கும் ஸ்மிருதி இரானி!

தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!

தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!

அடுத்த அதிர்ச்சி... ஈரோடு ஸ்டிராங் ரூமில் கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!

பயங்கரம்... கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in