காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

உதயா
உதயா

சென்னை தாம்பரம் அருகே காதலியுடன் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்  பொதுமக்கள் முன்னிலையில் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நரேஷ்
நரேஷ்

சென்னை தாம்பரம் கிழக்கு திருவள்ளுர் நகரைச் சேர்ந்தவர் கனகராஜ்.‌ இவரது மகன் உதயா என்ற உதயகுமார் (22)  பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று இவர் தனது காதலியுடன் பைக்கில் சிட்லப்பாக்கம் சேது நாராயணன் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் உதயாவை வழிமறித்து காதலி கண் முன்னே சரமாரி வெட்டினர்..

உயிருக்கு பயந்து தப்பி ஓடிய உதயாவை அந்த கும்பல் விடாமல் துரத்திச்சென்று வெட்டிவிட்டு சாவகாசமாக அங்கிருந்து  தப்பிச்சென்றது.‌ இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உதயாவின்  காதலி பயந்து நடுங்கி அங்கிருந்து ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.  

நடுரோட்டில் வாலிபர் ஒருவரை வெட்டி விட்டு, மர்ம நபர்கள் தப்பிச் சென்றதைப் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து அங்கு சென்ற சிட்லபாக்கம் போலீஸார் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த உதயாவை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையே உதயாவை வெட்டிய 3 பேரும் சேலையூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். சம்பவம் நடந்த இடம் சிட்லப்பாக்கம் காவல் நிலைய எல்லை என்பதால் போலீஸார் அவர்கள் 3 பேரையும் சிட்லப்பாக்கம்  காவல் நிலையத்தில்  ஒப்படைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உதயா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து சிட்லப்பாக்கம் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து சரணடைந்த மூவரிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் திருவள்ளுர் மப்பேடு பகுதியைச் சேர்ந்த எலக்ட்டீரிசன் நரேஷ்(24), கல்லூரி மாணவர் கிருஷ்ணா(19),  சாந்தகுமார்(19) என்பது தெரிய வந்தது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தாம்பரம் கிழக்கு  திருவள்ளுவர் நகர், கண்ணப்பர் தெருவில் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் உதயகுமாருக்கும், நரேஷிற்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அப்போது உதயகுமார் , நரேஷ்சை கத்தியை காட்டி  மிரட்டி ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது.  இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து  உதயாவை கொலை செய்தது  விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் ‌‌. 

இதையும் வாசிக்கலாமே...


இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பெலிக்ஸ் ஜெரால்டு எங்கே?! கண்டுபிடித்துத் தருமாறு மனைவி காவல்துறையில் மனு!

பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து... பல லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!

ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல்... பள்ளிக்கல்வித்துறை புதிய அப்டேட்ஸ்!

16,500 கோடி பயிர்க் கடன்... இந்த ஆண்டுக்கு இலக்கு நிர்ணயித்தது கூட்டுறவுத் துறை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in