பெங்களூரில் ஹெல்மெட் போடாமல் ஸ்கூட்டரில் வந்ததற்காக அபராதம் விதிக்க முயன்ற காவலரின் கை விரலை இளைஞர் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு வில்சன் கார்டன் 10வது குறுக்குத் தெரு அருகே போக்குவரத்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது வாகனத்திலிருந்து போலீஸார் சாவியை எடுத்ததால், ஆவேசமடைந்த சையத் ரஃபி என்ற அந்த இளைஞர், திடீரென போக்குவரத்து போலீஸாரின் கையை கடித்தார். இந்த சம்பவத்தை அங்கிருந்த தலைமை காவலர் சிட்ரமேஸ்வரா கவுஜலகி வீடியோ பதிவு செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தலைக்கவசம் அணியாமல் விதி மீறியபோதிலும், நடவடிக்கைக்கு ஒத்துழைக்காமல் சையத் ரஃபி, போலீஸாரை கடித்துள்ளார். இதனால் அவரை போலீஸார் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து சையத் ரஃபி மீது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் விதிக்க முயன்ற போலீஸார் கையை இளைஞர் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!
வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!
பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!