பைக்கின் விலையே ரூ.30,000தான்; அபராதம் ரூ.3.2 லட்சமா? - போக்குவரத்து போலீஸிடம் கதறிய வாகன ஓட்டி!

பெங்களூரு நகரில் போலீஸார் வாகன சோதனை
பெங்களூரு நகரில் போலீஸார் வாகன சோதனை கோப்பு படம்

30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்திற்கு 3.2 லட்சம் ரூபாய் போக்குவரத்து விதிமீறல் அபராதம் விதிக்கப்பட்டதால் வாகனத்தை வைத்துக் கொள்ளுமாறு வாகன ஓட்டி கூறிய சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பல்வேறு இடங்களில் செயற்கை நுண்ணறிவு கொண்ட கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கண்டறியப்படும் வாகன ஓட்டிகளின் வாகன எண்ணைக் கொண்டு உடனுக்குடன் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரு நகரில் அமைக்கப்பட்டுள்ள ஏஐ போக்குவரத்து கேமராக்கள்
பெங்களூரு நகரில் அமைக்கப்பட்டுள்ள ஏஐ போக்குவரத்து கேமராக்கள்

இவ்வாறு அபராதம் விதிக்கப்படும்போது, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரின் செல்போன் எண்ணிற்கு அது தொடர்பான தகவல்கள் வந்துவிடும். ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட வாகனங்களுக்கு, பதிவு செய்யும் போது மொபைல் எண் கொடுக்கும் வழக்கம் இருக்கவில்லை.

இதனால் பழைய வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் தொடர்பான தகவல்கள் செல்போன்களுக்கு வருவதில்லை. இதனால் பலமுறை அபராதம் விதிக்கப்பட்ட பிறகு, போலீஸார் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கு செல்லும்போதுதான் அபராதம் விதிக்கப்பட்ட தகவலே தெரிய வருகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் அளவிற்கு அபராதம் விதிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

அந்த வகையில் பெங்களூரு நகரின் சுதாமா நகரை சேர்ந்த வாகன ஓட்டி ஒருவர் தொடர்ந்து பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதால் செயற்கை நுண்ணறிவு கேமரா அவருக்கு கடந்த 6 மாதத்திற்கு மேலாக அடுத்தடுத்து அபராதத்தை பதிவு செய்து வந்துள்ளது. ஆனால் இது தொடர்பான தகவல் தெரியாததால் வாகன உரிமையாளர் அந்த அபராத தொகையை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

மேலும் தனக்கு அபராதம் விழுந்தது தெரியாததால் அவர் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு அபராத தொகையாக 3.2 லட்சம் ரூபாய் சேர்ந்ததை அடுத்து காவல்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்கு நேரில் சென்று அபராத தொகையை செலுத்துமாறு கேட்டுள்ளனர்.

அப்போதுதான் தனக்கு இந்த அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டதே அந்த நபருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது வாகனத்தின் மொத்த மதிப்பே முப்பதாயிரம் ரூபாய் தான் என்பதால் தனது வாகனத்தை எடுத்துக் கொள்ளுமாறு போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் மேலதிகாரிகளிடம் பேசி அபராதத் தொகையை தவணை முறையில் செலுத்துமாறு வாகன உரிமையாளருக்கு அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு செலுத்தாவிட்டால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் போலீஸார் எச்சரித்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் பெங்களூரு நகரைச் சேர்ந்த வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in