
தீபாவளி வசூலில் ஈடுபட்ட திருச்சி, திருப்பூர் மாவட்டங்களின் விற்பனைக்குழு செயலாளரிடமிருந்து 9. 70 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி மாவட்ட விற்பனைக்குழு தலைமை அலுவலகம் பாலக்கரையில் செயல்பட்டு வருகிறது. இதன் செயலாளராக சுரேஷ் பாபு இருந்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திற்கும் முதல்நிலை செயலாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இவருடைய கட்டுப்பாட்டில் திருச்சி மாவட்டத்தில் 14 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும், திருப்பூர் மாவட்டத்தில் 15 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் இயங்கி வருகின்றன.
இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள விற்பனையாளர்களிடம் இருந்து செயலாளர் சுரேஷ்பாபு, தீபாவளி வசூல் செய்து வருவதாக திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் துணை வட்டாட்சியர் பிரேம்குமார், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்னா வெங்கடேஷ், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் குழுவினருடன் திருச்சி பாலக்கரையில் உள்ள திருச்சிராப்பள்ளி விற்பனை குழு அலுவலகத்தில் இன்று மதியம் திடீரென புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் சுரேஷ்பாபுவிடமிருந்து கணக்கில் வராத 90 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
மேலும், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் செயலாளர் சுரேஷ்பாபு, விற்பனையாளர்களிடமிருந்து வசூல் செய்த தொகையை கிராப்பட்டியில் அவர் தங்கியிருக்கும் வீட்டில் வைத்திருப்பதாக சொன்னார். அதையடுத்து கிராப்பட்டியில் அவரது அறையைச் சோதனை செய்தபோது கணக்கில் வராத ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இருந்தது. அதையும் சேர்த்து மொத்தம் ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
மேலும் சுரேஷ்பாபுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!
வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஐயப்பனுக்கு தங்க அங்கி.. சபரிமலையில் இன்று நடை திறப்பு!
செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!