நீலகிரி மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் யானைகள் தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தற்போது கோடைக் காலம் தொடங்கி உள்ளதால் வனப்பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளன. இதனால் உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரிவது வாடிக்கையாக உள்ளது.
அவ்வப்போது யானைகள், சிறுத்தைகள், புலிகள் தாக்கி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை அடுத்தடுத்து இரு வேறு இடங்களில் யானைகள் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் மாதேவ் (50). இன்று காலை 8 மணி அளவில் தேயிலை தோட்டங்களுக்கு தண்ணீர் விடும் பணிக்காக பம்ப் செட் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று, திடீரென மாதேவை தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பிற தொழிலாளர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதே போல் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள மசனகுடி மோயார் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (51) என்பவர் இன்று காலை வழக்கம் போல் பணிக்காக கிளம்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் செல்லும் வழியில் நின்றிருந்த காட்டு யானை ஒன்று திடீரென நாகராஜை தாக்கியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரது சடலத்தை கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றுள்ள இந்த யானை தாக்குதல்கள் காரணமாக கூடலூர் பகுதி மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. வனத்துறை தொடர்ந்து ரோந்து பணிகளை அதிகப்படுத்தவும், குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அதே சமயம் வனப்பகுதியில் தற்போது வறட்சி நிலவுவதால், நீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணிகளை வனத்துறையினர் துரிதமாக செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
எரிவாயு சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைப்பு... தேசிய மகளிர் தினத்தில் பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு
பகீர்... துண்டு துண்டாக வெட்டி வாலிபர் படுகொலை: சென்னையில் ரவுடிகள் 2 பேர் கைது!
சிக்கலில் திமுக... உதயநிதியை வளைக்கும் வியூகத்தில் மத்திய சக்திகள்?
ஷாக்... இலங்கையைச் சேர்ந்த 4 குழந்தைகள், தாய் உள்பட 6 பேர் குத்திக்கொலை: கனடாவில் பயங்கரம்!
ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலை துவங்கும் திமுக, அதிமுக... முதல் பட்டியலை வெளியிடப்போவது யார்?